சென்னையில், ஒரே நாளில் 2 மடங்கு கொரோனா நோயாளிகள் அதிகரிப்பு.. தமிழகத்திலேயே முதலிடம்
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையில் சென்னைக்கு முதலிடம் கிடைத்துள்ளது. சென்னையில் 81 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் 43, திருநெல்வேலி 36 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோயாளிகள் எண்ணிக்கை, அதிகப்படியாக இருப்பது சென்னையில் என்ற புள்ளிவிபரம் வெளியாகியுள்ளது.
சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், புதிதாக இன்று 102 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் எனவே, தமிழகத்தின் எண்ணிக்கையை 411 என்ற அளவில் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் மாவட்டவாரியாக இதுவரை எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற எண்ணிக்கை சற்று முன்பு வெளியானது. அதன்படி சென்னையில் அதிகபட்சமாக 81 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாவது இடம் திண்டுக்கல் மாவட்டத்திற்கு, அங்கு 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்றாவது இடம் திருநெல்வேலிக்கு.., அங்கு 36 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 411 பேருக்கு கொரோனா.. ஆனாலும் ஒரு நல்ல செய்தி இருக்கு.. பீலா ராஜேஷ் சொன்னதை பாருங்க
பிற மாவட்டங்களில் நிலவரத்தை இங்கு பாருங்கள்:
- ஈரோடு 32
- கோவை 29
- தேனி 21
- நாமக்கல் 21
- கரூர் 20
- செங்கல்பட்டு 18
- மதுரை 15
- விழுப்புரம் 13
- திருவாரூர் 12
- விருதுநகர் 11
- திருப்பத்தூர் 10
- தூத்துக்குடி 9
- சேலம் 8
- ராணிப்பேட்டை 5
- கன்னியாகுமரி 5
- சிவகங்கை 5
- நாகை 5
- காஞ்சிபுரம் 4
- திருவண்ணாமலை மற்றும் ராமநாதபுரம் தலா 2
- திருவள்ளூர், வேலூர், தஞ்சாவூர் மற்றும் திருப்பூர் 1. ஆக மொத்தம் 411
இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு அம்சம் என்னவென்றால் இதுவரை கொங்கு மண்டலப் பகுதிகள் கொரோனா வைரஸ் பாதிப்பில் முன்னிலையில் இருந்த நிலையில், அதன்பிறகு அந்த இடத்தை திருநெல்வேலி பிடித்தது. இதற்கு முக்கிய காரணம் டெல்லி நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மேலப்பாளையம் பகுதிக்கு திரும்பியவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த இரு தினங்களாக, சென்னை முதலிடம் பிடித்துள்ளது.
நேற்று 46 என்ற நிலையில் இருந்த சென்னை நிலவரம், இன்று சுமார் 2 மடங்கு அதிகரித்துள்ளது, குறிப்பிடத்தக்கது. அதேநேரம், இவர்களில் பெரும்பாலானோர் டெல்லி சென்று திரும்பியவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தார்தான். எனவே சமூக பரவல் என்ற நிலை உருவாகவில்லை என்பதை பீலா ராஜேஷ் உறுதியாக தெரிவித்தார்.