சச்சினை ஒரு நிமிடம்தான் சந்தித்தேன்.. எனது ஆலோசனையை ஏற்றுக் கொண்டது மகிழ்ச்சி.. சென்னை குருபிரசாத்
சென்னை: சச்சின் டெண்டுல்கருக்கு ஆலோசனை வழங்கியது மறக்க முடியாத நிகழ்வு என குருபிரசாத் தெரிவித்துள்ளார்.
சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் குருபிரசாத். இவர் சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் பணிபுரிந்திருந்தார். கடந்த 2001-ஆம் ஆண்டு சென்னையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
அப்போது சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் சச்சின் உள்ளிட்ட வீரர்கள் தங்கியிருந்தனர். அப்போது சச்சினின் எல்போகார்டை மாற்றுமாறு குருபிரசாத் ஆலோசனை கூறியிருந்தார்.
சச்சின் வலைவீசி தேடிய ஹோட்டல் ஊழியர்..வேறு யாருமில்லை.. நம்ம சென்னைவாசிதானாம்.. பேரு குருபிரசாத்!
ட்விட்டர் பக்கம்
அந்த ஆலோசனையின் பேரில் சச்சின் தனது எல்போ கார்டை மாற்றிக் கொண்டார். இதையடுத்து இந்த ஆலோசனை சிறப்பாக இருந்ததாகவும் ஆலோசனை வழங்கிய ஊழியரை தான் சந்திக்க விரும்புவதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
பெரம்பூர்
இந்த நிலையில் சச்சினுக்கு ஆலோசனை கூறிய நபர் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த குருபிரசாத் சுப்பிரமணியன் ஆவார். இதுகுறித்து அவர் தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் சச்சினுக்கு ஆலோசனை வழங்கியது மறக்க முடியாத நிகழ்வாகும்.
ஹோட்டலில் தங்கிய சச்சின்
சச்சினின் விளையாட்டை நான் விரும்பி பார்ப்பேன். அப்போது அவர் அவுட் ஆகும் சமயத்தில் அவரது எல்போ கார்டுதான் காரணம் என கருதினேன். ஆனால் இதை எப்படி சொல்வது என நினைத்தேன். அப்போதுதான் சென்னையில் டெஸ்ட் போட்டிக்காக சச்சின் உள்ளிட்டோர் நான் பணியாற்றி வந்த ஹோட்டலில் தங்கியிருந்தனர்.
எல்போர் கார்டு
அப்போது சச்சினிடம் சென்று நான் உங்களுக்கு ஒரு ஆலோசனை கூறலாமா என கேட்டேன். அவரும் சந்தோஷமாக சொல்லுங்கள் என்றார். அப்போது நான் எல்போ கார்டு குறித்து கூறினேன். அதற்கு தான் மாற்றிக் கொள்வதாக தெரிவித்தார். இதையடுத்து அடுத்த போட்டிகளிலிருந்து தனது எஸ்போ கார்டை சச்சின் மாற்றிக் கொண்டார்.
வீட்டுக்கு வர ஆசை
இதை நான் எனக்கு நெருக்கமானவர்களிடம் மட்டுமே கூறினேன். நான் சச்சினுக்கு ஆலோசனை கூறியதாக மற்றவர்களிடம் கூறினால் அதை யாரும் நம்பமாட்டார்கள். இதனால் நான் இத்தனை நாட்களாக இதை சொல்லவில்லை. அவரை ஒரு நிமிடம்தான் சந்தித்து பேசினேன். ஆனால் எனது ஆலோசனையை அவர் கனிவுடன் கேட்டுக் கொண்டார். இது மகிழ்ச்சி. அவர் எனது வீட்டுக்கு வர வேண்டும் என்பதே எனது ஆசை என குருபிரசாத் தெரிவித்தார்.