ஒன்றாக சேர்ந்து வருவதுதான் சிக்கல்.. நிவர் புயல், செம்பரம்பாக்கம்.. சென்னைக்கு வானிலை வைக்கும் செக்
சென்னை: சென்னையில் நிவர் புயல் காரணமாக கனமழை பெய்து வரும் நிலையில் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது. தற்போது செம்பரம்பாக்கம் திறக்கப்பட உள்ள நிலையில் சென்னைக்கு பல்வேறு பக்கங்களில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Recommended Video
நிவர் புயல் காரணமாக தமிழகம் முழுக்க பல மாவட்டங்களில் மழை துவைத்து எடுத்துக் கொண்டு இருக்கிறது. முக்கியமாக கடலோர மாவட்டங்களில் தீவிர கனமழை பெய்து வருகிறது.
இன்றும் நாளையும் தமிழகம் முழுக்க பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் மட்டும் நினைத்ததை விட குறைவாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை
சென்னையில் தற்போது நிலவரப்படி கனமழை பெய்து வருகிறது. நினைத்ததை விட அதிக மழை சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வருகிறது. இதனால் சென்னையில் இருக்கும் பெரும்பாலான ஏரிகள் தங்கள் கொள்ளளவை எட்டி வருகிறது. 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.
நீர்மட்டம்
இதன் நீர் மட்டம் 21.8 அடியை தாண்டி உள்ளது. 22 அடியை எட்டும் போது இந்த ஏரி திறக்கப்படும். இந்த ஏரியை திறப்பதால் சென்னையில் இப்போது 2015 போல வெள்ளம் ஏற்படாது. ஆனால் இந்த ஏரியை திறப்பதால் அடையாறு ஆற்றின் கரையோரம் இருக்கும் பகுதிகளில் சிறிய வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது. காவலூர், குன்றத்தூர், திருநீர்மலை, திருமுடிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சாலைகள்
அடையாறு ஆற்றில் ஏற்கனவே மழை காரணமாக தண்ணீர் உள்ள நிலையில் தற்போது செம்பரம்பாக்கம் நீரும் வருவதால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மழை நீர், செம்பரம்பாக்கம் நீர் வரத்து எல்லாம் சேர்த்து அடையாற்றில் வெள்ளம் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
நிற்காது
இங்குதான் சிக்கலே இருக்கிறது. சென்னையில் இப்போதைக்கு மழை குறையாது என்று வானிலை மையம் கூறியுள்ளது. நாளை வரை மழை பெய்யும். வானிலை மாற்றம் ஏற்பட்டால் மாமல்லப்புரம் செல்லும் புயல் திசை மாறி சென்னையில் அல்லது சென்னையின் எல்லையில் கரையை கடக்க வாய்ப்புள்ளது.
இன்றும் பெய்யும்
செம்பரம்பாக்கம் நீர் பிடிப்பு பகுதிகளில் இன்று ஒரே நாளில் 20 செ.மீ மழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையில் விடாமல் 40 மணி நேரம் மழை பெய்யலாம். செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து வினாடிக்கு 7000 கனஅடியாக அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக அடையாற்றில் இன்னும் வெள்ளம் வர வாய்ப்புள்ளது.
மழை மட்டும் இல்லை
மழை மட்டும் பெய்து அதனால் செம்பரம்பாக்கம் நிரம்பினால் சமாளிக்கலாம். ஆனால் இப்போது செம்பரம்பாக்கம் நிரம்புகிறது. இன்னொரு பக்கம் தொடர்ந்து விடாமல் மழையும் பெய்கிறது. இதெல்லாம் போக இனியும் மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு மேல் இன்று இரவு புயல் வேறு தாக்க உள்ளது. சென்னைக்கு எதிராக மொத்தமாக வானிலை திரும்பி உள்ளது.
சென்னை நிலை
சென்னையில் ஏற்கனவே சாலையில் நிரம்பி இருக்கும் தண்ணீரே வடியவில்லை. பல பகுதிகளில் முழங்கால் அளவு தண்ணீர் உள்ளது. இதன் காரணமாக சென்னையில் சாலைகளில் இன்னும் அதிகம் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளது. 2015 போல இருக்காது என்றாலும்.. கண்டிப்பாக சென்னைக்கு குறிப்பிடத்தகுந்த அளவு சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது.