மாசு கட்டுப்பாட்டு அதிகாரி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
சென்னை: லஞ்ச வழக்கில் மாசு கட்டுப்பாட்டு அதிகாரி பன்னீர்செல்வம் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் பன்னீர்செல்வத்தின் காரை வழி மறித்து, லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், சோதனை நடத்தினர்.
அப்போது, 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து, பன்னீர்செல்வத்தின் வீட்டில் சோதனை செய்து 3 கோடியே 25 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய், 3.5 கிலோ தங்க நகைகள் உள்ளிட்டவைகளை கைப்பற்றினர்.
இவற்றின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் பன்னீர்செல்வம் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், லஞ்ச ஒழிப்பு போலீஸார் என்னிடம் பறிமுதல் செய்த ரொக்கப் பணம், தங்கம் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களுக்கும் விளக்கம் அளிக்க தயாராக உள்ளதால் முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி வி.பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், மனுதாரரிடம் இருந்து பெருந் தொகை மற்றும் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், லஞ்சம் பெறுகின்ற அதிகாரிகளுக்கு முன் ஜாமீன் வழங்கினால், பொதுமக்களுக்கு சட்டத்தின் மீது பயம் இல்லாமல் போய்விடுவதோடு, கேலிக்கூத்தாக அமைந்து விடும் என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.