தீபா, தீபக் இருவரும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்.. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை: தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது. முன்னதாக 2ஆம் நிலை வாரிசாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தீர்ப்பில் திருத்தம் கொண்டு வந்தது.
ஜெயலலிதாவுக்கு திருமணம் ஆகாததால் அண்ணன் மகள், மகனை நேரடி வாரிசாக அறிவித்து தீர்ப்பில் திருத்தம் மேற்கொண்டதாகவும் சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் உள்பட சுமார் ரூ 900 கோடி மதிப்பிலான சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகி ஒருவரை நியமிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுகவைச் சேர்ந்த புகழேந்தி கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.
முதலமைச்சரை பாராட்ட மு.க.ஸ்டாலினுக்கு மனமில்லை... குறைகூறுவதே தலையாய பணி -அமைச்சர் காமராஜ்
ஜெ தீபா
இந்த வழக்கில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ தீபா, அவரது தம்பி ஜெ. தீபக் ஆகியோர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டனர். மேலும் தங்களை ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளாக அறிவிக்க கோரி தீபாவும், தீபக்கும் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
மறுபரிசீலனை
அதிமுகவின் புகழேந்தி தொடர்ந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் கடந்த 27-ஆம் தேதி தீர்ப்பளித்தனர். அதில் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை முழுமையாக நினைவில்லமாக மாற்றும் திட்டத்தை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
வேதா இல்லம்
ஜெயலலிதா இல்லத்தின் ஒரு பகுதியை நினைவு இல்லமாகவும் மற்றொரு பகுதியையும் முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமாகவும் மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்தது. மேலும் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க அவரின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோருக்கும் உரிமை உள்ளது. இவர்கள் இருவரும் இரண்டாம் நிலை வாரிசுகளாக அறிவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
புகார்
இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு திருமணம் ஆகாததால் அண்ணன் மகள், மகனை நேரடி வாரிசாக அறிவித்து ஏற்கெனவே அளித்த தீர்ப்பில் இன்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றம் திருத்தம் மேற்கொண்டது. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் வேதா இல்லத்திற்கு தீபா சென்றதாக அரசு தரப்பு வழக்கறிஞர் புகார் அளித்தார். இதையடுத்து ஜெ தீபாவுக்கு அறிவுரை வழங்குமாறு அவரது வழக்கறிஞருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.