டெங்குவை கட்டுப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன.. அறிக்கை கேட்டும் உயர்நீதிமன்றம்
சென்னை: டெங்குவை கட்டுப்படுத்த எடுக்கபட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் டெங்கு பாதிப்பால் உடல்நலகுறைவும், ஆங்காங்கே பச்சிளம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலியாகி வரும் நிலையில், டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்தவும், உயிரிழப்புகளை தடுக்கவும் நடவடிக்கை கோரி வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம் என்பவர் பொது நல மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சுகாதாரத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உரிய நேரத்தில் நிரப்பாததும், அதில் அரசு மெத்தனபோக்கை காட்டுவதும் தான் காரணமென சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர், சுகாதார துறை சார்ந்த நிபுணர்கள் கொண்ட ஒரு குழுவை அமைக்க வேண்டுமெனவும், டெங்கு பாதிப்புகளை கட்டுப்படுத்த உத்தரவுகள் பிறப்பித்து அவற்றை கண்காணிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் டெங்கு பாதிப்பால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.
அதேபோல டெங்கு பாதிப்பு உள்ளவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிகிச்சைக்கு அரசு செலவிட உத்தரவிட வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் என்.சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, சாலை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களின் அடியில் தேங்கியிருக்கும் நீரில் இருந்து டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதாக மனுதாரர் குற்றம் சாட்டினார்.
நடைபாதைகளை விரிவுபடுத்தியது, வாகனங்களை நிறுத்தவா எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அரசு என்ன நடவடிக்கை எடுத்தாலும், சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருப்பது பொதுமக்களின் சமூக கடமை எனவும் சுட்டிக்காட்டினர்.
டெங்குவை கட்டுப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கை குறித்து தமிழக அரசும், சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது குறித்து மாநகராட்சியும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 15ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.