வறுமை கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க தடை... உயர்நீதிமன்றம் அதிரடி
Recommended Video
சென்னை: வறுமை கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தடை விதித்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, உலர்ந்த திராட்சை, ஏலக்காய், 2 அடி நீளமுள்ள கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1,000 கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ரொக்கப் பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு நேற்று முன்தினம் முதல் பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ரூ.1,000 ரொக்கமாக கொடுப்பதற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கிய சட்டசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
பொங்கல் பரிசு
கோவையை சேர்ந்த டேனியல் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு வருமானம் உள்ளிட்ட எந்த ஒரு பாகுபாடின்றி, ரூ.1000-த்தை பொங்கல் பரிசாக வழங்குகிறது.
நிதி சுமை
ஏற்கனவே, கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரண பணிகளை முடிக்காத நிலையிலும், அதற்கு மிகப்பெரிய நிதி தேவைப்படும் சூழ்நிலையிலும், இதுபோல பொதுமக்கள் அனைவரும் ரொக்கப்பரிசு வழங்கினால், அது தேவையில்லாத நிதி சுமையை அரசுக்கு ஏற்படுத்தும்.
மனு தாக்கல்
நலத்திட்டங்களை உருவாக்கி பொதுமக்களுக்கு மாநில அரசு வழங்கலாம். அதுகூட பொருளாதார நிலையின் அடிப்படையிலேயே உருவாக்க வேண்டும். அதற்காக அனைவருக்கும் ரூ.1,000 ரொக்கப்பரிசு வழங்குவது ஏற்க முடியாது என்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
அடிப்படை வசதிகள்
இதுகுறித்து உயர்நீதிமன்றம் இன்று விசாரணை நடத்தியது. அப்போது நீதிபதிகள் கூறுகையில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசு ஏன்? இந்த தொகையை சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு பயன்படுத்தலாமே.
பொங்கல் பரிசு
1000 ரூபாய் யாருக்கு போய் சேர வேண்டும் என்பதை வகைப்படுத்திய பிறகே இதை வழங்கியிருக்க வேண்டும். பொங்கல் பரிசாக ரூ. 1000 கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? எனவே வறுமை கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கக் கூடாது. அதாவது ரொக்கத்தை கொடுக்கக் கூடாது. வழக்கமாக கொடுக்கப்படும் அரிசி, கரும்பு, சர்க்கரை, முந்திரி- திராட்சை உள்ளிட்டவற்றை வழங்கிக் கொள்ளலாம்.
வெள்ளை நிற ரேஷன் கார்டு
அரசின் கொள்ளை முடிவு என்றால் யாரும் கேள்வி கேட்க முடியாது என நினைக்கக் கூடாது. கட்சியின் பணம் என்றால் யாரும் கேட்க மாட்டார்கள். வரிப்பணம் என்பதால்தான் இந்த கேள்வி எழுகிறது. எனவே வெள்ளை நிற அட்டைதாரர்கள், என்பிஎச்எச், என்பிஎச்எச்எஸ் கார்டுகளுக்கு 1000 ரொக்கம் பொங்கல் பரிசு வழங்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.