ஏ.ஆர். ரஹ்மானுக்கு சேவை வரி விதித்து ஜிஎஸ்டி ஆணையம் நோட்டீஸ்.. ஹைகோர்ட் புதிய உத்தரவு
சென்னை: ஏ.ஆர் ரஹ்மானுக்கு சேவை வரி தொடர்பாக வருமான வரித் துறை விதித்த நோட்டீஸுக்கு வரும் 4-ஆம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
ஆஸ்கர் நாயகனும் இந்திய திரையுலகின் இசையமைப்பாளருமான ஏ.ஆர்.ரஹ்மான் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறுகையில் நான் தமிழ், இந்தி உள்ளிட்ட மொழி படங்களுக்கு இசையமைத்து வருகிறேன்.
ஒரு இசையமைப்பாளரான எனக்கு எனது படைப்பு மீது முழுமையான காப்புரிமை இருக்கிறது. அந்த உரிமையை தயாரிப்பாளருக்கு அளித்து விட்டால் சம்பந்தப்பட்ட இசையமைப்பாளர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
எனது படைப்புகளுக்கான முழு காப்புரிமையை தயாரிப்பாளர்களுக்கு நான் வழங்கியுள்ளேன். இதற்காக நான் சேவை வரி செலுத்த வேண்டும் என ஜிஎஸ்டி ஆணையர் எனக்கு நோட்டீஸ் அக்டோபர் 17-ஆம் தேதி அனுப்பியுள்ளார்.
இஸ்லாமியர்களுக்கு எதிரானது ஆர்எஸ்எஸ் என்பதை பாடப்புத்தகத்தில் ஏன் நீக்க வேண்டும்? ஹைகோர்ட்
ஒரு பாடலுக்கான இசையை தயாரிப்பாளருக்கு வழங்குவது என்பது சேவை அல்ல. எனவே எனக்கு சேவை வரி விதித்ததே தவறு. ஜிஎஸ்டி ஆணையர் எனக்கு அனுப்பிய நோட்டீஸ் மீது தடை விதிக்க வேண்டும், அதை ரத்து செய்யவும் வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.
இந்த மனு உயர்நீதிமன்றத்தில் நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறுகையில் ஏ.ஆர். ரஹ்மானுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸிற்கு வரும் 4-ஆம் தேதி வரை இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக ஜிஎஸ்டி ஆணையர் இன்னும் 15 தினங்களுக்குள் உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.