தமிழக பாஜகவுக்கு கிடைத்த சூப்பர் லட்டு.. கட்சியில் இணைகிறார் பால் கனகராஜ்.. வக்கீல் அணி தலைவராகிறார்
பால் கனகராஜ் பாஜகவில் நாளை இணைய உள்ளார்
சென்னை: தமிழக பாஜகவுக்கு புதுவரவு ஒன்று நாளை வரபோகிறது... சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் ஆர்சி பால்கனகராஜ் அக்கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை ஹைகோர்ட்டின் பிரபல வழக்கறிஞர் ஆர்.சி. பால்கனகராஜ்... சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிட்டு சங்கத் தலைவராக வெற்றி பெற்றவர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் உறுப்பினராகவும் வெற்றி பெற்றார் அதன்பிறகு பார்கவுன்சில் தலைவர் தேர்தலில் போட்டியிட்டார்.
இவர் ஒரு அரசியல்வாதியும்கூட... தனியாக தமிழ் மாநில கட்சி என்ற ஒரு கட்சியை ஆரம்பித்து நடத்தியும் வருகிறார்.. சில வருடங்களுக்கு முன்பு திமுகவில் இருந்தவர்.. அக்கட்சியில் வழக்கறிஞர்கள்-போலீசார் மோதலின்போது, மாநில அரசின் அணுகுமுறையை கண்டித்து திமுக வழக்கறிஞர்கள் அணியிலிருந்து விலகுவதாக அப்போது அறிவித்தவர்.
கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற ஆர்.கே.நகர் தேர்தலின்போது, ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டார்.. பிறகு தோல்வியை சந்தித்தார். அதுபோல, ஜெ. மறைவுக்கு பிறகும் நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது, போட்டியிடுவதாக அறிவித்தார்.. ஆனால், போட்டியிடாமல், தனது கட்சி, ஓபிஎஸ் அணி வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவு அளிக்கும் என்றார். இந்த நிகழ்வுகள் எல்லாம் அந்தந்த காலக்கட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நாளை பாஜகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.. தமிழக பாஜக தலைவர் முருகன் தலைமையில் இவர் கட்சியில் இணைய உள்ளதாக தெரிகிறது.. கட்சியில் இணையும் பால் கனகராஜுக்கு வழக்கறிஞர் அணி தலைவர் பதவி வழங்கப் படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தன்னுடைய தமிழ் மாநில கட்சியையும் பாஜகவில் இணைக்க உள்ளார்.. இந்த இணைப்பு விழா, சென்னை அமைந்தகரையில் உள்ள லட்சுமி திரையரங்கத்தில் உள்ள ஒரு ஹாலில் நடைபெறுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பாஜகவை பொறுத்தவரை பால் கனகராஜின் வருகை மிகப் பெரிய விஷயமாக பார்க்கப்பட வேண்டியதாகும்.
தமிழகத்தில் பலர் கட்சியில் இணைந்திருந்தாலும் கூட வழக்கறிஞர்கள் மத்தியில் செல்வாக்கு மற்றும் தாக்கத்தை கொண்டவரான, பொறுப்பான பதவியில் இருப்பவருமான பால் கனகராஜ் வந்து இணைவது அக்கட்சிக்கு நிச்சயம் பலமான அம்சமாகவே பார்க்கப்பட வேண்டியதாகும். தீவிரமாக செயல்படக் கூடியவர். சட்ட ரீதியான பிரச்சினைகளில் இவரது அனுபவம் பாஜகவுக்கு நிச்சயம் பயன்படும் என்று நம்பலாம்.
"பக்"குன்னு இருக்கு.. பெட்ரோல், டீசல் விலை டெய்லி கிடுகிடு உயர்வு.. மக்கள் அதிர்ச்சி!