நதிகளை முறையாக பராமரிக்காததற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விதித்த ரூ. 100 கோடி அபராதத்திற்கு தடை
சென்னை: நதிகளை முறையாக பராமரிக்காததற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விதித்த ரூ 100 கோடி அபராதத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சென்னையில் ஓடும் கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகியவை மாசடைந்துவிட்டது. இதை தமிழக அரசு முறையாக பராமரிக்கத் தவறியது என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஜவகர் சண்முகம் என்பவர் உள்பட சிலர் மனு தாக்கல் செய்தனர்.
இதை விசாரித்த தீர்ப்பாயம் 19 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை வெளியிட்டது. அதில் கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகிய நீர்நிலைகள், தங்குதடையின்றி மாசடைந்து வருகின்றன. அவை சாக்கடையாகவே மாறிவிட்டன. இதை தடுக்க தவறிய மாநில அரசின் தோல்வியையே இந்நிகழ்வு காட்டுகிறது.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தயாரித்த 351 மாசடைந்த ஆறுகள் பட்டியலில் மேற்கண்ட 3 நீர்நிலைகளும் இல்லை. இருப்பினும், இவை மாசடைந்து விட்டது என்பதிலோ, அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை போதுமானது அல்ல என்பதிலோ மாற்றுக்கருத்து இல்லை.
கூவம், அடையாறு ஆறுகளை சீரமைக்க ரூ.104 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும் அவை சீரமைக்கப்படவில்லை. மாநில அரசின் தோல்வியை கருத்திற்கொண்டு, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் தமிழக அரசு ரூ.100 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறோம்.
குறிப்பிட்ட காலத்துக்குள் சீரமைப்பு பணிகளை முடிப்பதாக தமிழக அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும். பணிகள் குறித்த அறிக்கையுடன் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி தமிழக அரசின் தலைமை செயலாளர் ஆஜராக வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.
இதை எதிர்த்து பொதுப் பணித் துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தமிழக அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் விதித்த ரூ.100 கோடி அபராதத்திற்கு தடை விதித்துள்ளது.