சிலைக் கடத்தல் வழக்கு.. தமிழக அரசாணை ரத்து.. ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு
Recommended Video
சென்னை: சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. அத்துடன் சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேலை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி காட்டியுள்ளது.
தமிழகத்தில் கடத்தப்பட்ட சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு ஐஜி பொன் மாணிக்கவேல் விசாரணை நடத்தி பெரும்பாலான சிலைகளை வெளிநாடுகளிலிருந்தும் மீட்டெடுத்தார். இந்நிலையில் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
இதை எதிர்த்து யானை ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வே இதையும் விசாரித்தது. அப்போது சிலை கடத்தல் பிரிவு வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்ததுடன் அந்த வழக்குகளை பொன் மாணிக்கவேல் தலைமையில் விசாரிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சிலை கடத்தல் தொடர்பாக நீதிமன்றம் ஒரு தனிப்பிரிவை அமைத்து விசாரணை நடத்தி வரும் நிலையில் சிபிஐ விசாரணை நடத்த அரசாணை பிறப்பித்தது நீதிமன்ற அவமதிப்பாகும் என தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்த நீதிமன்றம் இது தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தது.
இதற்கு மத்திய அரசு கால அவகாசம் கோரியதால் இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த சூழலில் இன்றுடன் பொன் மாணிக்கவேல் ஓய்வு பெறுவதால் சிலை கடத்தல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியது தொடர்பாக இன்று தீர்ப்பு அளித்தது.
அப்போது நீதிபதிகள் கூறுகையில் சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றியது தொடர்பான தமிழக அரசின் அரசாணை ரத்து செய்யப்படுகிறது. அத்துடன் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக பொன் மாணிக்கவேலை நீதிபதிகள் நியமித்து அதிரடி காட்டினர்.