காவல் துறை வாத்திய இசைக்குழு காவலரை பிற பிரிவுகளுக்கு மாற்றக் கூடாது- ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: காவல் துறை வாத்திய இசைக் குழு காவலரை, பிற பிரிவு இரண்டாம் நிலை காவலராக பணிமாற்றம் செய்ய முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழ்நாடு காவல் துறையில் வாத்திய இசைக் குழு காவலராக கோவை ஆயுதப்படையில் பணியாற்றி வரும் பர்கத். இசைக் குழு காவலர்களுக்கும், பிற பிரிவு இரண்டாம் நிலை காவலர்களுக்கும் ஒரே ஊதிய விகிதமே பின்பற்றப்படுவதாலும், ஒரே அந்தஸ்து உள்ளதாலும், தன்னை இரண்டாம் நிலை காவலர் பணிக்கு மாற்ற வேண்டும் என, ஆயுதப் படை ஆணையருக்கு விண்ணப்பித்தார்.
ஆனால், இரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வும், பயிற்சியும் வெவ்வேறானவை எனக் கூறி, பர்கத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இதை எதிர்த்து பர்கத் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு, இசைக் குழு காவலர் பதவியும், இரண்டாம் நிலை காவலர் பணியும் வெவ்வேறானவை...
தேர்வு நடைமுறை, பயிற்சி போன்றவையும் வெவ்வேறானவை என்பதால், இசைக் குழு காவலரை, பிற பிரிவு இரண்டாம் நிலை காவலராக பணிமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.