எழும்பூர் கண் மருத்துவமனையில் கூடுதல் கட்டடம்.. மரம் வெட்ட தடை கோரி ஹைகோர்ட்டில் மனு
சென்னை: சென்னை எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்காக, மரங்களை வெட்ட தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
உலகிலேயே இரண்டாவது பழமையான கண் மருத்துவமனையாக, எழும்பூர் கண் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
இந்த மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்காக, அங்குள்ள 75 மரங்களை வெட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், இந்த மரங்களை வெட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் எழும்பூரைச் சேர்ந்த கேப்டன் நாராயணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
மருத்துவமனை வளாகத்தில் மரங்கள் இல்லாத காலியிடங்கள் இருக்கும் நிலையில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரங்களை வெட்டுவது சட்டவிரோதமானது என மனுவில் கூறப்பட்டுள்ளது.
இன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. கவனமாக இருங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை!
இந்த மனு, நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு சுற்றுச்சூழல் பிரச்னையாக இருப்பதால், சம்பந்தப்பட்ட அமர்வில் மனுவை பட்டியலிடும்படி நீதிபதிகள் பரிந்துரைத்தனர்.