மருத்துவர்கள் ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வரக் கோரிய மனு.. நாளை விசாரிக்கும் உயர்நீதிமன்றம்
சென்னை: அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரக் கோரிய மனுவை நாளை விசாரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கால முறை ஊதியம், பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள், அக்டோபர் 25ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்கள், பணிக்கு திரும்ப வேண்டும் என அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்நிலையில், அரசு மருத்துவர்களின் வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
ஸ்டாலின் அரசியல் வியாபாரி..பொய் சொல்வதில் வல்லவர்.. நாங்குநேரி பிரச்சாரத்தில் முதல்வர் கடும் தாக்கு!
மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், அரசு மருத்துவமனைகளை மட்டுமே நம்பியுள்ள ஏழை மக்கள், அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்படாததால், நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வு முன்பு வழக்கறிஞர் சூர்ய பிரகாசம், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என முறையிட்டார்.
இதனை ஏற்று கொண்ட நீதிபதிகள், மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதாக தெரிவித்தனர்.