பேனர் வைத்த குற்றவாளி வெளிநாட்டுக்கு தப்பிவிட்டாரா?.. ஹைகோர்ட் நீதிபதி சரமாரி கேள்வி
சென்னை: சுபஶ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் சென்னை மாநகர காவல்துறை ஆணையரும் அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உரிய அனுமதி இல்லாமல் பேனர் வைக்க கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை அமல்படுத்தாத தலைமை செயலாளர் மீது சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பேனர் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. தொடர்பில்லாதவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வழக்குகள் திசை திருப்பப்படுகிறது என வேதனை தெரிவித்தது.
சுபஸ்ரீ குடும்பம்
மேலும் பேனர் விழுந்து உயிரிழந்த சுபஶ்ரீயின் குடும்பத்துக்கு நிவாரணமாக 5 லட்சம் ரூபாயை சம்பவத்திற்கு காரணமான அதிகாரிகளிடம் இருந்து வசூலித்து வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், சென்னை காவல்துறை ஆணையர் கண்காணிப்பில் பள்ளிக்கரணை மற்றும் செயின்ட் தாமஸ் மவுண்ட் காவல் ஆய்வாளர்கள் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளின் மீது வழக்கு பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
திமுக
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், சுபஶ்ரீ உயரிழப்புக்கு பிறகு கட்சியினர் பேனர்களை வைக்கக் கூடாது என மீண்டும் திமுக சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மாஜிஸ்திரேட்
பேனர்கள் வைக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டோம் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். நீதிமன்றம் தெரிவித்த உத்தரவுகளை திமுக தீவிரமாக கடைபிடித்து வருகிறது. மாநகராட்சி, காவல்துறை அதிகாரிகள் சட்டவிரோதமான பேனர் அகற்றாததே சுபஶ்ரீ உயிரிழப்புக்கு காரணம். குற்றவாளிகள் மீது நடவடிக்கை இல்லாததால் ஒட்டுநரை வழக்கில் கைது செய்ய மாஜிஸ்திரேட் மறுப்பு தெரிவித்துள்ளார்.
சிபிசிஐடி
பேனர் வைத்த குற்றவாளிகள் 2 வாரத்திற்கு பிறகும் கைது செய்யப்படாததால், பேனர் விழுந்து உயரிழந்த சுபஶ்ரீ வழக்கை டிஜிபி-யின் நேரடி கண்காணிப்பில் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என தெரிவித்தார்.
சட்டவிரோத பேனர்கள்
மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முதல்கட்டமாக மாநகராட்சி உதவி பொறியாளர் காமராஜ் மற்றும் உதவி செயற்பொறியாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி தரப்பில் விடுக்கப்பட்ட கட்டுப்பாட்டால் எந்த பேனர்களும் தற்போது அச்சடிக்கப்படுவது இல்லை. நிறுவனங்களின் கோரிக்கை ஏற்கப்பட்டால் மீண்டும் சட்டவிரோத பேனர்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டது.
வெளிநாடு
அப்போது கேள்வி எழுப்பிய நீதிபதிகள் பேனர் வைத்து சுபஶ்ரீ உயிரிழப்புக்கு காரணமாக இருந்த, முக்கிய குற்றவாளியை பாதுகாக்கும் வகையில் குறைந்த தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யதுள்ளது ஏன்? குற்றவாளி என்ன வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டாரா?
அறிக்கை
நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு திமுக மட்டுமே பேனர் வைக்க மாட்டோம் என நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். வேறு கட்சியும் இதுவரை அறிக்கை தாக்கல் செய்யவில்லை ஏன்? ஆளுங்கட்சியான அதிமுக ஏன் இதுவரை பேனர் வைக்க மாட்டோம் என அறிக்கை தாக்கல் செய்யவில்லை?
மோசம்
திருமண நிகழ்ச்சிகளின் போது பேனர்களை மண்டபத்தின் முகப்பில் வைப்பதற்கு மாறாக பேருந்து நிலையம் மற்றும் சாலைகளை ஆக்கிரமித்தே பெரும்பாலும் வைக்கப்படுகிறது. பேனர்களால் நமது கலாச்சாரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள்
டிஜிட்டல் பேனர்களை 150 அடி வரை அச்சடித்துவிட்டு, அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு மட்டும் நிறுவனங்கள் பொறுப்பேற்க முடியாது என்றால் அதை நீதிமன்றம் ஏற்க முடியாது? மாநகராட்சி ஆணையரின் உத்தரவு நிறுவனங்களை மட்டுமே கட்டுப்படுத்துவதாக உள்ளது. ஆனால் பேனர்கள் சாலை மற்றும் நடைபாதையில் வைக்கப்படுவதை தடுக்காத அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை.
அறிக்கை
பேனர்கள் வைப்பதற்கான விதிமுறையை வகுக்காமல், டிஜிட்டல் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க முடியாது. எத்தனை டிஜிட்டல் பேனர் நிறுவனங்கள் உரிமம் பெற்றுள்ளன? உரிமம் இல்லாமல் எத்தனை செயல்படுகிறது? என விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
சென்னை ஹைகோர்ட்
சுபஶ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் ஆணையர், போக்குவரத்து துறை கூடுதல் ஆணையர், மற்றும் சென்னை மாநகர காவல்துறை ஆணையரும் அக்டோபர் 15ம் தேதிக்குள் தனித்தனியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.