ஜெ. விவகாரத்தில் சினிமா வில்லனை போல் கதை விட்ட அப்பல்லோ நிர்வாகம்- ஹைகோர்ட் நீதிபதி சாடல்
சென்னை: ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் இன்னும் விலகவில்லை என்றும் சினிமா வில்லனை போல் ஜெ. இட்லி சாப்பிட்டார், நகைச்சுவையாக பேசினார் என கட்டுக்கதைகளை அப்பல்லோ நிர்வாகம் கூறியது என்றும் ஹைகோர்ட் நீதிபதி வைத்தியநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.
பெங்களூருவை சேர்ந்த அம்ருதா என்பவர் ஜெயலலிதாவின் மகள் என்று கூறி உரிமை கோரினார். பின்னர் சென்னை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதை நீதிபதி வைத்தியநாதன் விசாரித்தார். அப்போது அவர் கூறிய தீர்ப்பில், மரபணு சோதனை செய்வதற்கு ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அவரது ரத்த மாதிரிகள் எடுத்து பாதுகாக்கப்பட்டதா என்று அப்பல்லோ மருத்துவர்களிடம் கேட்டதற்கு அவர்கள் இல்லை என்றனர்.
சிவபெருமான்
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் மாதிரியை கொண்டு மரபணு சோதனை நடத்தலாம் எனறால் ஜெயலலிதாவின் மகள் என்பதற்காக முதற்கட்ட ஆதாரங்கள் ஏதும் அம்ருதாவிடம் இல்லை. திருவிளையாடல் புராணத்தில் வெள்ளிநிலவுக்கு திருமணம் நடந்ததற்கு வன்னிமரம், கிணறு சாட்சியாக இருந்தது. இவ்வளவு ஏன் சிவபெருமானும் சாட்சி சொன்னதாக புராணங்கள் கூறுகின்றன.
ஆதாரங்கள்
ஜெயலலிதான் மகள் அம்ருதா என்று சாட்சி சொல்ல இறந்தவர்களாகிய சைலஜாவும் சாரதியும் வரமாட்டார்களே. இந்த வழக்கில் எத்தனை திருப்பங்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம் நாம் ஆதாரங்களாக எடுத்துக் கொள்ள முடியாது.
ஆலோசனை
இத்தனை சோதனைகளுக்கு மத்தியில் பெரும் வேதனை என்றால் அது ஜெயலலிதாவின் மரணம் இன்று வரை மர்மமாகவே உள்ளது. இட்லி சாப்பிட்டார், உப்புமா சாப்பிட்டார், நர்ஸ்களுடன் ஜோவியலாக பேசினார், காவிரி குறித்த ஆலோசனை நடத்தினார் என அப்பல்லோ நிர்வாகம் சினிமா வில்லன்களை போல் கட்டுக் கதைகளை கூறியிருந்தது.
வாரிசுகள்
ஜெயலலிதாவின் தாயார் 1971-ஆம் ஆண்டு எழுதிய உயிலில் கூட ஜெயக்குமார் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் பெயரை மட்டும் குறிப்பிட்டுள்ளார். அம்ருதாவின் வளர்ப்பு தாய் சைலஜாவின் பெயரை அதில் இல்லை. எனவே ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசுகள் யாரும் இல்லை என்று தனது உத்தரவில் நீதிபதி தெரிவித்தார்.