மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் கட்டாயம் இல்லை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி
அரசு விழாக்களில் தேசிய கீதம் கட்டாயம் இல்லை என ஹைகோர்ட் தெரிவித்துள்ளது.
சென்னை: அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தேசிய கீதம் பாடவேண்டும் என்பது கட்டாயமில்லை என சென்னை ஹைகோர்ட் தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றார்.
இதேபோல கடந்த ஞாயிறு அன்றும், திருப்பூரில் கூட்டத்திலும் கலந்து கொண்ட பிரதமர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தமிழ்த்தாய் வாழ்த்து
இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் தமிழக முதல்வர், அமைச்சர்கள் உட்பட அரசு அதிகாரிகள், பலர் கலந்து கொண்டனர். அரசு நிகழ்ச்சியான இந்த இரண்டிலுமே தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் பாடப்படவில்லை.
கண்டனங்கள்
அரசு விழாவில் தேசிய கீதம் இசைக்கப்படுவது மரபு என்பதாலும், இது மீறப்பட்டதாலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இன்று விசாரணை
தேசியகீதம் பாடுவது தொடர்பாக வேம்பு என்பவர் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு ஒன்றினையும் தொடுத்தார். அந்த மனுவில், "பிரதமர் பங்கேற்ற இரண்டு அரசு நிகழ்ச்சிகளிலும் தேசிய கீதம் பாடப்படாதது குறித்து தலைமைச் செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்" என கூறியிருந்தார். இதன் மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
மனு தள்ளுபடி
அப்போது, பிரதமர் பங்கேற்கும் விழாவில் தேசிய கீதம் பாட வேண்டுமென்று கட்டாயமில்லை என்று கோர்ட் தெரிவித்து விட்டதுடன், இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் தள்ளுபடி செய்துவிட்டது.