இணை இயக்குனர் காணொலி காட்சி மூலம் ஆஜராக சென்னை ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: சுகாதாரத் துறை ஊழியர் பணி நியமனம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவை புறக்கணிக்கும் வகையில் செயல்பட்ட தருமபுரி மாவட்ட சுகாதார பணிகள் துறையின் துணை இயக்குனரை ஜூலை 15ம் தேதி காணொலி காட்சி மூலம் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் கரியப்பனள்ளியை சேர்ந்த எல்.சின்னதம்பி என்பவர் சுகாதார துறையில் மஸ்தாராக தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வந்தார். தன்னை பணிநிரந்தரம் செய்யக்கோரி அவர் அளித்த விண்ணப்பத்தை நிராகரித்து, தருமபுரி மாவட்ட சுகாதார பணிகள் துறையின் துணை இயக்குனர், 2011 ஜூன் 13ம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து சின்னத்தம்பி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 2006 முதல் 2016 வரை பணியில் இருந்ததை கணக்கில் கொண்டு, அவரை பணி நிரந்தரம் செய்வது குறித்து பரிசீலிக்க 2018 மார்ச் மாதம் உத்தரவு பிறப்பித்தது.
அதன்பின்னர் சின்னத்தம்பி கோரிக்கையை பரிசீலித்த துணை இயக்குனர் மீண்டும் நிராகரித்து 2018 ஜூன் மாதம் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, துணை இயக்குனருக்கு எதிராக நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரபட்ட நிலையில், சின்னத்தம்பியை கள பணியாளராக நியமித்து 2019 பிப்ரவரியில் துணை ஆணையர் உத்தரவிட்டார்.
பணி நியமனம் வழங்கிவிட்டதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் முடித்து வைக்கப்பட்டது. இந்நிலையில் சின்னத்தம்பியை மீண்டும் பணிநீக்கம் செய்து கடந்த மார்ச் 13ம் தேதி துணை இயக்குனர் உத்தரவு பிறப்பித்தார்.
சீனா பிரச்சினையில் இந்தியாவுக்கு ட்ரம்ப் உதவ மாட்டார்.. அவர் பிளான் வேற.. போட்டு உடைத்த மாஜி அதிகாரி
இந்த உத்தரவை எதிர்த்து சின்னத்தம்பி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி.பார்த்திபன், நீதிமன்ற உத்தரவை புறக்கணிக்கும் வகையில் துணை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளதால், அவர் ஜூலை 15ம் தேதி காணொலி காட்சி மூலம் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும், எந்த அடிப்படையில் பணிநீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பதை எழுத்துபூர்வமாக பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.