ஹைட்ரோகார்பன் திட்டம்.. 8 வாரங்களுக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்காக வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரிய வழக்கு குறித்து மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நெடுவாசல் மற்றும் காரைக்குடி பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஜெம் லேபாரட்ரிஸ் மற்றும் பாரத் பெட்ரோ ரிசோர்ஸ் கம்பனிகளுக்கு மத்திய அரசு கடந்த 2017-ம் ஆண்டு உரிமம் வழங்கியது.
இந்த உரிமத்தை ரத்து செய்ய கோரி பூவுலகின் நண்பர்கள் இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது..
அதில், அனைத்து வகையான ஹைட்ரோ கார்பன்களையும் ஒற்றை உரிமம் மூலம் எடுக்கும் விதமாக மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.. இது 2018-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பெட்ரொலியம் மற்றும் இயற்கை வாயு சட்டத்திற்கு எதிராக உள்ளது.
மேலும், பூமிக்கு அடியில் இருக்கும் ஹைட்ரோ கார்பனை, சட்டப்படி அனுமதிக்கப்படாத ஹைட்ரொலிக் ஃப்ராக்சன் முறைப்படி எடுக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வு, மனு குறித்து 8 வார காலத்திற்குள் மத்திய அரசு மற்றும் உரிமம் பெற்ற நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.