வழக்கறிஞர்கள் தாக்குதல்.. அறிக்கை தாக்கல் செய்ய போலீஸுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: தனியார் தங்கும் விடுதியில் வழக்கறிஞர்கள் நடத்திய தாக்குதல் சம்பவம் தொடர்பாக காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பெரிய மேட்டில் முகமது இஸ்மாயில் கான் என்பவருக்கு சொந்தமான விடுதியை குத்தகைக்கு எடுத்து, சுமார் 60 லட்சம் செலவு செய்து மரகபா பேலஸ் என்ற 33 அறைகள் கொண்ட தங்கும் விடுதியை அப்துல் ஜப்பார் என்பவர் நடத்தி வருகிறார்.
தங்கும் விடுதி சிறப்பாக செயல்பட்டு வருவதால், ஒப்பந்தப்படி குத்தகை விட்டவர்களுக்கு மாதம் மாதம் பங்கு தொகையில் பாதியையும் அப்துல் ஜப்பார் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் விடுதியை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனக்கூறி மிரட்டி வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 7 ம் தேதி திடீரென விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த வழக்கறிஞர்கள் 5 பேர் அங்கிருந்த பொருட்கள் மற்றும் சிசிடிவியை அடித்து நொறுக்கியதோடு, அப்துல் ஜப்பாரையும் தாக்கி விடுதியில் இருந்து வெளியேற்றியுள்ளனர்.
இது தொடர்பாக காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து, விடுதிக்கு பாதுகாப்பு வழங்க கோரியும், வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அப்துல் ஜப்பார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், பொங்கியப்பன் அமர்வு, இச்சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் 2 நாட்களில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தார்.