உரிமை கோரப்படாத சடலங்களுக்கு தகனம் செய்ய கோரிய வழக்கு.. புதிய அறிக்கைக்கு ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனை பிணவறைகளில் உரிமை கோரப்படாமல் உள்ள சடலங்களை தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் சுகாதாரத் துறை செயலாளர் மற்றும் காவல்துறை டிஜிபி ஆகியோர் தாக்கல் செய்த அறிக்கை திருப்திகரம் இல்லை மீண்டும் புதிய அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பல்வேறு காரணங்களால் மரணமடையும் நபர்களின் உடல்கள், அரசு மருத்துவமனைகளின் பிணவறைகளில் வைக்கப்பட்டு, 10 நாட்களுக்கு பின் அவற்றை உரிய நடைமுறைகளை பின்பற்றி புதைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுபோல, அடையாளம் காணப்படாத, உரிமை கோரப்படாத உடல்களை மயானங்களில் புதைக்கப்படுவதால், இடப்பற்றாக்குறை ஏற்படுவதாகவும், உடல்களை நீண்ட நாட்கள் மருத்துவமனையில் வைத்திருப்பதன் மூலம், நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாலும், இந்த சடலங்களை தகனம் செய்ய அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ஜீவாத்மா கைங்கர்ய அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ரமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அடையாளம் தெரியாத, உரிமை கோரப்படாத உடல்களை தகனம் செய்ய பிற மாநில நீதிமன்றங்கள் அனுமதியளித்துள்ளதாகவும், தமிழகத்தில் வழக்குகளை காரணம் காட்டி, புதைக்க மட்டுமே அனுமதிக்கப்படுவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகனம் செய்வதற்கு முன், சம்பந்தப்பட்ட சடலங்களின் முடி, ரோமம், நகம் போன்றவை எடுத்து பாதுகாக்கப்படுவதால், அடையாளம் காண்பதில் எந்த சிக்கலும் ஏற்படாது எனவும், தகனம் செய்வதால் அதிக செலவும் ஏற்படாது என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் அனிதா சுமந்து அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது இந்த வழக்கில் காவல்துறை டிஜிபி மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்தார்கள் அந்த அறிக்கையில் தமிழகம் முழுவதும் 184 உரிமை கோராமல் உள்ள சடலங்கள் உள்ளதாகும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் உரிமம் கோராமல் உள்ள சடலங்களை மருத்துவக் கல்லூரிகளுக்கு சுமார் ஒரு லட்ச ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் அதில் வரும் வருமானத்தில் 50 ஆயிரம் ரூபாயை அரசுக்கும் மீதமுள்ள 50 ஆயிரம் ரூபாயை பிணவறை மேம்படுத்துவதற்கும் பணியாளர்கள் செலவுக்கும் ஒதுக்கப்படுவதாக அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்
ரேஷன் கார்டை காண்பித்து கூட்டுறவு வங்கிகளில் ரூ.50,000 வரை கடன் பெறலாம்... செல்லூர் ராஜூ
இந்த அறிக்கைக்கு ஆட்சேபனை தெரிவித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ராஜ்மோகன் தற்போது தமிழகத்தில் இதுபோன்ற உரிமம் கோராமல் உள்ள சடலங்களை சுமார் 2400-க்கு மேல் உள்ளதாகும் மாநில குற்ற ஆவண பிரிவில் இதற்கான முழு விவரங்கள் உள்ளதாகும் ஆனால் அந்த அடிப்படையில் சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை டிஜிபி ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்யவில்லை என்றும் வாதிட்டார்
மேலும் இந்த சடலங்களை அடக்கம் செய்ய உரிய நடைமுறையும் இதுவரை வகுக்கவில்லை எனவும் தெரிவித்தார் இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் தற்போது இந்த அறிக்கை தங்களுக்கு திருப்தி இல்லை என்று கூறியும் மீண்டும் புதிய அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜூன் 27ஆம் தேதியன்று ஒத்தி வைத்துள்ளனர்.