சட்டவிரோத 3,326 டாஸ்மாக் பார்களை உடனே இழுத்து மூடுங்கள்.. ஹைகோர்ட் அதிரடி
சட்டவிரோதமாக இயங்கி வரும் டாஸ்மாக் பார்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வரும் 3,326 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கோவையை சேர்ந்த டி.பிரபாகரன் என்பவர் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்தார். இந்த மனுவில் அவர் தெரிவித்திருந்ததாவது:
"சூலூர் பகுதியில் 5 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த கடைகளில் மது வாங்கும்போது கூடுதல் விலை வாங்குகிறார்கள். அதற்கு பில் எதுவும் தருவதில்லை. விலைப்பட்டியலும் வைக்கப்படவில்லை. சட்டவிரோதமாகவும் மது விற்பனை செய்பவர்களுக்கு சப்ளை செய்கிறார்கள். ஒவ்வொரு பாட்டிலுக்கும் ரூ.5 முதல் 10 ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கிறார்கள்.
பராமரிப்பு இல்லை
மதுக்கடைகளை ஒட்டியுள்ள பார்கள் மிகவும் அசுத்தமாக உள்ளது. பராமரிப்பு இல்லை. அங்கு விற்கப்படும் உணவு பொருட்களும் அதிக விலையாக இருக்கிறது. பார்களில் கழிப்பறை, தண்ணீர் வசதி இல்லை. இந்த அவலம் தமிழகம் முழுவதும் பெரும்பாலான பார்களில் இருக்கிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை மாவட்ட கலெக்டரிடம் புகார் கொடுத்தேன்.
பரிசீலனை தேவை
அவர் எனது புகாரை கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கு கலெக்டர் அனுப்பினார். ஆனால், அந்த கடைகளில் எந்த விதிமீறலும் இல்லை என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கலெக்டருக்கு அறிக்கை அளித்துவிட்டனர். எனவே சட்டவிரோதமாக இயங்கி வரும் பார்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், சுகாதாரம், அடிப்படை வசதிகள் பேணப்பட வேண்டும். இதனை தமிழக அரசு பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
குற்ற வழக்குகள்
இந்த மனு நீதிபதிகள் மணிக்குமார் சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய 'டிவிஷன் பெஞ்ச்' முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, 'டாஸ்மாக்' நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் 'அதிக விலைக்கு விற்றதாக சென்ற ஆண்டு 3,500 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உரிமம் இல்லாமல் செயல்பட்ட 2,505 சட்டவிரோத பார்கள் மீது வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகள் ஜாமீனில் வெளி வரமுடியாத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
மூட வேண்டியதுதானே?
அதற்கு நீதிபதிகள், "வழக்கு மட்டும் பதிவு செய்தால் போதுமா, அதற்கு என்ன தண்டனை? சட்டவிரோதமாக நடக்கிறது என்றால் உடனே அதை மூட வேண்டியது தானே? திரும்ப திரும்ப பார்கள் சட்ட விரோதமாகத்தான் செயல்படும். சட்டவிரோத பார்கள் என்று தெரிந்த உடனேயே எப்ஐஆர் பதிவு செய்து பார்களை உடனடியாக மூட வேண்டும்" என்றனர்.
மூட உத்தரவு
இதனை பதிவு செய்த நீதிபதிகள், தமிழக உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை செயலாளர், அனைத்து மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட டாஸ்மாக் மேலாளர்கள் ஆகியோர் மூலம் தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக, அனுமதியின்றி செயல்படும் பார்களை உடனடியாக இழுத்து மூட நடவடிக்கை எடுக்கவேண்டும். அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வரும் 20ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவு பிறப்பித்தனர்.