செல்விக்கு எதிரான வழக்கில் பதிலளிக்க காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வி எதிரான வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி மனு குறித்து பதில் அளிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திமுகவின் மறைந்த தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் மகள் செல்வி, தனக்கு சொந்தமாக காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு வட்டம் தாளம்பூர் கிராமத்தில் உள்ள 2.94 ஏக்கர் நிலத்தை, வளசரவாக்கத்தைச் சேர்ந்த நெடுமாறன் என்பவருக்கு 5.14 கோடி ரூபாய்க்கு விற்க ஒப்புக் கொண்டு, 3.50 கோடி ரூபாய் முன்பணமாகப் பெற்றுவிட்டு, வேறு ஒருவருக்கு அந்த நிலத்தை பத்திரப் பதிவு செய்து கொடுத்துள்ளார். முன்பணத்தை திருப்பிக் கேட்ட நெடுமாறனை, தாக்கி, மிரட்டியுள்ளதாக குற்றம் சாட்டி காவல்துறையில் புகார் அளிக்கபட்டது.
இதுசம்பந்தமாக நெடுமாறன் அளித்த புகாரின் அடிப்படையில், செல்வி மற்றும் அவரது மருமகன் ஜோதிமணி ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப் பிரிவினர், வழக்குப்பதிவு செய்தனர்.
பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கின் விசாரணை அங்கு முறையாக நடைபெறவில்லை எனவும் எனவே விசாரணை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி நெடுமாறன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில் வழக்கில் கூடுதல் ஆதாரங்கள் இருப்பதாகவும் அதன்படி விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என கோரி பூந்தமல்லி நீதிமன்றத்தில் விசாரணை அதிகாரி மனு தாக்கல் செய்துள்ளார்.
ஆனால் அதன் மீது எந்த உத்தரவும் அளிக்காமல் அரசு தரப்பு சாட்சிகள் விசாரணையை தொடர்ந்து மேற்கொண்ட வருகின்றார். மேலும் குற்றம் சாட்டபட்டவர்கள் அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள் எனவே விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும் என்றால் வழக்கின் விசாரணை பூந்தமல்லி நீதிமன்றத்தில் இருந்து ஆலந்தூர் நீதிமன்றம் அல்லது வேறு ஏதேனும் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும்.
அதுவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதி தற்போதைய நிலையில் வழக்கின் விசாரணை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற உத்தரவிட முடியாது. உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்கு முடியும் வரை பூந்தமல்லி நீதிமன்றம் இறுதி தீர்ப்பை அளிக்க கூடாது.
மனு தொடர்பாக மத்திய குற்றப்புனைவு, செல்வி, ஜோதிமணி ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணை செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.