மோசடி வழக்கு.. செந்தில் பாலாஜி வரும் 14ஆம் தேதி ஆஜராக சென்னை ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: போக்குவரத்து துறையில் வேலை பெற்று தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் பிப்ரவரி 14 ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு முன்பு ஆஜராக செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2011-2015-ஆம் ஆண்டு போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்த போது அத்துறையில் வேலை வாங்கித் தருவதாக தெரிவித்து ரூ 90 லட்சத்தை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராக காவல்துறை தரப்பில் நோட்டீஸ் கொடுத்த அன்றைய தினமே முன் ஜாமின் வழங்கியது குறித்து விளக்கம் கேட்டு காவல்துறை சார்பில் நீதிபதி ஆதிகேசவலு முன்பு முறையீடு செய்யப்பட்டது.
முன் ஜாமீன் வழங்கி பிறப்பித்த உத்தரவில் திருத்தம் செய்வது தொடர்பாக காவல்துறை மனு தாக்கல் செய்யலாம். முன் ஜாமீன் வழங்கிய உத்தரவில் திருத்தம் செய்யும் வரை செந்தில் பாலாஜி பிணை தொகை செலுத்த அவசியமில்லை என நீதிபதி தெரிவித்தார்.
போக்குவரத்துத் துறையில் வேலை பெற்று தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி இருந்தது சென்னை உயர் நீதிமன்றம்.