தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்க முடியாது.. சென்னை ஹைகோர்ட்
சென்னை: தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடைவிதித்து கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தொடரப்பட்ட சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு ஜூலை 26-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி, ஏகே கங்குலி, அரிமா சுந்தரம் உள்ளிடோர், கடந்த 5 ஆண்டுகளில் ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி சில மரணங்கள் நிகழ்ந்ததால் இந்த விளையாட்டிற்குத் தடை விதித்ததாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் ஜல்லிக்கட்டு போட்டியின் போது ஒவ்வொரு ஆண்டும் 20 பேர் வரை பலியாகி வருகின்றனர். உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டிற்கு தடை விதித்தும் மாநில அரசு சட்டம் இயற்றி ஜல்லிக்கட்டைத் தொடர்ந்து நடத்தி வருவதாகவும் அவர்கள் வாதிட்டனர். ஜல்லிக்கட்டுக்கு மட்டும் அனுமதி அளித்த அரசு ஆன்லைன் விளையாட்டிற்கு மட்டும் தடைவிதித்துள்ளது. இது சூதாட்டம் இல்லை என்றும் வாதிட்டனர். மேலும், சட்டத்தை இயற்ற முறையாக எந்தவொரு காரணங்களும் தெரிவிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தனர்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர், இந்த விளையாட்டால் நிறைய பேர் ஏமாந்து போயுள்ளதாகவும் பொது நலனை கருத்தில் கொண்டு இந்த சட்டம் இயற்றபட்டதாகவும், இந்த சட்டத்தை இயற்ற அரசுக்கு அதிகாரம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை தள்ளிவைத்தனர். இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், தமிழக அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டம், அரசியல் சாசனத்துக்கு விரோதமானது எனவும், போதுமான காரணங்களை விளக்காமல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறி, சட்டத்தை ரத்து செய்தனர்.
மேலும், உரிய முறைப்படுத்தும் விதிகள் இல்லாமல் ஆன் லைன் விளையாட்டுக்களுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், உரிய விதிகளுடன் புதிய சட்டம் கொண்டு வர அரசுக்கு எந்த தடையும் இல்லை எனவும் தீர்ப்பளித்தனர்.