சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம்.. நீதிமன்ற விசாரணையில் முரண்பாடுகள்.. ஹைகோர்ட்
சென்னை: சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் காவல்துறை மற்றும் நீதிமன்ற விசாரணையில் முரண்பாடுகள் இருப்பதால் மகளிர் நீதிமன்ற நீதிபதி, அரசு சிறப்பு வழக்கறிஞர், காவல்துறை விசாரணை அதிகாரி ஆகியோரை நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் 2016ஆம் ஆண்டு நான்காம் வகுப்பு படித்த சிறுமியிடம், அப்பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் பாலியல் சீண்டல் செய்ததுடன், வன்கொடுமையும் செய்ததாக வந்த புகாரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ராஜா கைதானார்.
போக்சோ சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் இரு பிரிவுகளில் பதிவான வழக்கை விசாரித்த பெரம்பலூர் மகளிர் நீதிமன்றம் ராஜாவை குற்றவாளி என அறிவித்தது. அந்த தீர்ப்பில் போக்சோ சட்டப்பிரிவில் 15 ஆண்டுகள் சிறை தண்டனையும், இந்திய தண்டனை சட்டத்தின் இரு பிரிவுகளில் 7 ஆண்டுகள் மற்றும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்ததுடன், அபராதமும் விதித்தது. இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டிருந்தது.
பெரம்பலூர் மகளிர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜா மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஆதாரங்களையும் பெரம்பலூரில் நீதிமன்றத்திலிருந்து பெற்று தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.
பின்னர் அவற்றை ஆராய்ந்த நீதிபதி வேல்முருகன், காவல்துறை விசாரணையிலும், நீதிமன்ற விசாரணையிலும் முரண்பாடுகள் இருப்பதாக கண்டறிந்துள்ளார். எனவே காவல்துறையின் விசாரணை அதிகாரி மலர்க்கொடி, அரசு சிறப்பு வழக்கறிஞர் வினோத்குமார், தீர்ப்பளித்த நீதிபதி என்.விஜயகாந்த் ஆகியோரை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.