தேனி நாடாளுமன்ற தேர்தல் வழக்கு.. எம்பி ரவீந்திரநாத் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: தேனி நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் வரும் ஜனவரி 23-ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய இறுதி கெடுவிதித்து அவருக்கு எதிராக தாக்கல் செய்த தேர்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேனி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர்
ஓ. பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிட்டார்.
இதில் அதிமுக வேட்பாளர் ரவிந்திரநாத் 76,319 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் தேனி தொகுதியை சேர்ந்த வாக்காளர் மிலானி மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், தேனி நாடாளுமன்ற தொகுதி தேர்தலின் போது அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணப்பட்டுவடா செய்ததற்கான வீடியோ ஆதாரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. மேலும் தேர்தலில் அதிகார துஷ்பிரயோகம் செய்திருப்பதால் அவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரி அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி எம்.எஸ். ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. பதில் மனு தாக்கல் செய்யும் வரை தற்காலிகமாக எம்.பி. பதவி வகிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று மனு தாரர் தரப்பில் வழக்கறிஞர் அருண் வாதம் வைத்தார்.
இதையடுத்து நீதிபதி , ஓ. பி. ரவீந்திர நாத்துக்கு ஜனவரி 23-ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் வழக்கில் இறுதி கெடு விதித்து உத்தரவிட்டார்.