ககன் போத்ரா மனு.. சென்னை கமிஷனர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: அதிகாரம் துஷ்பிரயோகம் செய்து குண்டர் சட்டத்தில் அடைக்கபட்டதால் 500 கோடி நஷ்ட ஈடு கோரி பைனான்ஸியர் ககன் போத்திரா தொடர்ந்த மனுவிற்கு தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய சென்னை மாநகர காவல்துறை ஆணையர்க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை சவுகார்பேட்டை, மின்ட் தெருவை சேர்ந்த ககன் போத்ரா என்பவர் இந்த சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், எனது தந்தை முகுந்த்சந்த் போத்ரா பிரபல சினிமா பைனான்சியராக இருந்து வந்தார்.
நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரைத்துறையினர், தொழிலதிபர்களுக்கு வட்டிக்கு கடன் கொடுத்து வந்தார். இந்நிலையில் தி.நகரை சேர்ந்த தொழிலதிபர் செந்தில் குமார் கணபதி உள்ளிட்ட 4 பேர் தனது தந்தைக்கும் எதிராக காவல் துறையில் புகார் அளித்தனர்.
கொடுத்த பணத்திற்கு அவர்களின் ஓட்டலை மிரட்டி எழுதி வாங்க நினைப்பதாக அந்த புகாரில் தெரிவித்திருந்தனர். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் எந்தவிதமான விசாரணையும் இல்லாமல் விதிகளுக்கு புறம்பாக கைது செய்தனர்.
இதனையடுத்து பல சிவில் புகார்களை பெற்ற காவல்துறை என்னையும் எனது தந்தையும் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். ஏற்கனவே எனக்கும் எனது தந்தைக்கும் எதிராக புகார் அளித்தவருக்கு எதிராக சிவில் வழக்குகள் பல்வேறு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
சிவில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் எனக்கும் எனது தந்தைக்கும் எதிரான புகாரின் பேரில் கைது செய்து பின்னர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
செட்டிநாடு அறக்கட்டளை குதிரைகள் ரேஸில் பங்கேற்கலாம்.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
பின்னர் குண்டர் சட்டத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அதனை ரத்து செய்து உத்தரவிட்டது. குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கும் முன்னர் சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் சட்டத்திற்கு எதிராகவும், அதிகார பலத்தில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதனால் எனது நற்பெயருக்கும், தொழிலுக்கும் பெரும் பாதிப்பு எற்பட்டுள்ளது. அதிகார துஷ்பிரயோகம் மூலமாக குண்டர் சட்டத்தில் கைது செய்ததால் எனக்கு திருமணம் தடை ஏற்பட்டுள்ளது.
எனவே சட்டத்திற்கு எதிராக, அதிகார பலத்தில் என்னையும் எனது தந்தையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்ட சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் மற்றும் தமிழக அரசு எனக்கு 500 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி, ராஜமாணிக்கம் முன் விசாரணைக்கு வந்தது. பின்னர் மனு தொடர்பாக தமிழக அரசின் உள்துறை செயலாளர், சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணை பிப்ரவரி 5-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.