சுகாதாரம் இல்லாத மீஞ்சூர் ஊராட்சி தொடக்க பள்ளி.. மாவட்ட கல்வி அலுவலகம் பதிலளிக்க உத்தரவு
சென்னை: மீஞ்சூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை மேம்படுத்த கோரி 6 வயது மாணவியும், அவரது தந்தையும் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகாவில் உள்ள மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை கல்வி கற்பதற்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்தும் வகையில் சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, கட்டடத்தை புதுப்பிக்க வேண்டும் என மாணவி அதிகை முத்தரசியும், அவரது தந்தை பாஸ்கரனும் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அந்த மனுவில், கோவில் ஒன்றை ஒட்டி செயல்பட்டு வரும் பள்ளி வளாகம், பிச்சைக்காரர்கள் ஓய்வெடுக்கும் இடமாகவும், சட்டவிரோத செயல்கள் நடைபெறும் இடமாகவும் பயன்படுத்தப்படுகிறது எனவும், சுகாதாரம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு பள்ளி மாணவ மாணவியருக்கு உடல் நலக்குறைவு ஏற்படும் சூழ்நிலை ஏற்படுவதாகவும் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பள்ளியை புதுப்பிக்கவும் வேண்டுமென்று கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இருவரும் அரசு அதிகாரியிடம் மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
கல்வியை முன்னேற்ற அனைத்து ஏற்படும் செய்து வருவதாகக் அரசும், அரசு அதிகாரிகளும் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியை மேம்படுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர், பொன்னேரி தாசில்தார் தொடக்கக்கல்வி இயக்குனர், திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உள்ளிட்டோருக்கு தகுந்த உத்தரவு பிறப்பிக்க மனுவில் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன் சேஷசாயி அமர்வு, டாஸ்மாக் கடைகளுக்கான இடங்களை தேர்வு செய்வதில் மட்டும் கவனம் செலுத்தும் அரசு, பள்ளிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் ஏன் அலட்சியமாக செயல்படுகிறது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி, உதவி தொடக்க கல்வி அதிகாரி ஆகியோர் வரும் அக்டோபர் 16 ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.