மாணவர் நீக்கம்.. சென்னை பல்கலைக்கழகத்தில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தில் புத்த கொள்கை முதுகலை படிப்பில் இருந்து தன்னை நீக்கியதை எதிர்த்து மாணவர் கிருபாமோகன் தாக்கல் செய்த மனுவுக்கு செப்டம்பர் 24ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை பல்கலைக்கழகத்தில் இதழியல் படிப்பை முடித்த பின், தத்துவ இயல் துறையில் புத்த கொள்கை முதுகலை படிப்பில் சேர்ந்த கிருபாமோகன் தாக்கல் செய்த மனுவில், உரிய கட்டணம் செலுத்தி, சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின், விதிகளை மீறியதால் சேர்க்கைக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை என துணைவேந்தர் கடிதம் அனுப்பியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழக விதிகள் எதையும் மீறாத நிலையில், அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தில் உறுப்பினராக இருந்ததால் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்டதாக துணைவேந்தர் பேட்டியளித்துள்ளார் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், தன்னை நீக்கிய உத்தரவை ரத்து செய்து, மீண்டும் படிப்பில் சேர்க்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயசந்திரன், செப்டம்பர் 24ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டு, அன்றைய தினம் விசாரணையை தள்ளிவைத்தார்.