தற்காலிக சாய்தள பாதையை நிரந்தரமாக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி மெரினா கடற்கரையில் அமைக்கப்படும் தற்காலிக சாய்தள பாதையை நிரந்தரமாக்க கோரிய வழக்கில் தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமான டிசம்பர் 3ஆம் தேதி சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா கடற்கரையில் மரப் பலகையாலான தற்காலிக சாய்தளம் அமைக்கப்பட்டு வருகிறது. தசை சிதைவு, முதுகு தண்டுவடம் , கால் வளர்ச்சியின்மை போன்ற பாதிப்புள்ள மாற்றுத் திறனாளிகள் சக்கர நாற்காலிகள் மூலம் மெரினா அணுகு சாலையிலிருந்து, கடற்கரை மணற்பரப்பை கடந்து அலைகள் அருகே செல்வதை சாத்தியமாக்கும் வகையில் சென்னை மாநகராட்சி சாய்தள பாதை அமைத்தது.
பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாற்றுத் திறனாளிகள், தங்களது சக்கர நாற்காலியில் சாய்தளம் வழியாக கடலலைகள் வரும் இடம் வரை சென்று மகிழ்ந்தனர். ஒவ்வொரு வருடமும் அந்த சாய்தளம் இரண்டு நாட்களில் சென்னை மாநகராட்சி அகற்றி விடுகிறது.
இந்நிலையில் இந்த சாய்தள பாதையை அகற்றாமல் நிரந்தர பாதையாக மாற்றக்கோரி சென்னை வேளச்சேரியை சேர்ந்த வழக்கறிஞர் கே.கேசவன் என்பவர் தமிழக தலைமை செயலாளர், பொதுப்பணித்துறை செயலாளர், சமூக நலத்துறை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு டிசம்பர் 4ஆம் தேதி மனு அனுப்பியுள்ளார்.
அந்த மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது வழக்கு குறித்து தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் ஒரு வாரத்தில் விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
இன்று இந்த வழக்கு விசாரணையின்போது, மனுதாரர் கேசவன் தரப்பில் வழக்கறிஞர் சங்கரசுப்பு, ரமேஷ் ஆகியோர் ஆஜரானார்கள். தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞர் தம்பிதுரை, சென்னை மாநகராட்சி தரப்பில் சௌந்தரராஜன் ஆகியோர் ஆஜரானார்கள்.