முதல்வர் மீது விமர்சனம்... சுப்பிரமணிய சாமிக்கு எதிரான வழக்கு ரத்து... உயர் நீதிமன்றம் அதிரடி!
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை விமர்சனம் செய்ததற்காக சுப்பிரமணிய சாமி உள்ளிட்ட 4 பேருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த 9 அவதூறு வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
முதல்வரை தனிப்பட்ட முறையில் விமர்சித்தவர்களுக்கு எதிராக அரசு அவதூறு வழக்குகள் தொடர முடியாது எனவும், முதல்வரின் துறை சார்ந்த நடவடிக்கைகளை விமர்சித்தால் மட்டுமே அவதூறு வழக்கு தொடர முடியும் என நீதிபதி தெரிவித்தார்.
தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது அவரை பற்றியும், தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தமிழக அரசு குறித்தும் அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்த கருத்துகள் அடிப்படையில் அவர்களுக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு நீதிமன்றங்களில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன.
இவ்வாறு தமிழக அரசு தொடர்ந்த இந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி, திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி, திமுக எம்.பிக்கள் கனிமொழி, எஸ்.ஆர். பார்த்திபன், அமமுக துணை பொது செயலாளர் டி.டி.வி தினகரன், திமுக எம்.எல்.ஏ மைதீன் கான், முன்னாள் அமைச்சர் செல்வகணபதி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்குகள் இன்று நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது முதல்வரை தனிப்பட்ட முறையில் விமர்சித்தவர்களுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்குகள் தொடர முடியாது. முதல்வரின் துறை சார்ந்த நடவடிக்கைகளை விமர்சித்தால் மட்டுமே அரசு சார்பில் அவர்கள் அவதூறு வழக்கு தொடர முடியும் என நீதிபதி தெரிவித்தார்.
அதன்படி, முதல்வரை தனிப்பட்ட முறையில் மட்டுமே விமர்சித்ததாக சுப்பிரமணிய சாமிக்கு எதிரான 4 அவதூறு வழக்குகள், செந்தில் பாலாஜிக்கு எதிரான 2 வழக்குகள், செல்வகணபதிக்கு எதிரான 2 வழக்குகள், மைதீன் கானுக்கு எதிரான ஒரு வழக்கையும் ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.மேலும், கனிமொழி, டி.டி.வி தினகரன் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளை வெவ்வேறு தேதிகளுக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.