இந்து சமய அறநிலையத் துறைக்கு எதிராக உத்தரவிட உயர் நீதிமன்றம் மறுப்பு
சென்னை: தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு, இந்து சமய அறநிலையத் துறை ஊழியர்களை அயல்பணியாக நியமிக்க தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
தமிழக கோவில்களுக்கு, இந்து சமய அறநிலையத் துறை ஊழியர்கள் அயல்பணியாக நியமிக்க தடை விதிக்க கோரி டி.ஆர்.ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்து சமய அறநிலைய துறை ஊழியர்களை கோவில்களுக்கு அயல்பணியாக நியமிக்கும் போது, கோவில் நிதியில் இருந்து தான் அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டியுள்ளது என்பதால், இது இந்து சமய அறநிலையத் துறை சட்டத்துக்கு விரோதமானது என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, கோவில்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு நியமனங்கள் மேற்கொள்ள அறங்காவலர்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும், ஆனால் கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை எனவும், அது அரசின் கடமை எனவும் மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
மேலும், இந்து சமய அறநிலையத் துறை கண்காணிப்பாளர்கள், துணை ஆணையர்கள் அயல் பணியாக கோவில்களில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மேற்கொண்டு நியமனங்கள் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதற்கு பதிலளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், அறங்காவலர்களை நியமிப்பதற்காக, மாவட்ட அளவில் குழுக்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், குழு உறுப்பினர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்களை வரவேற்று விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளதாகவும், நான்கு வாரங்களில் மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கோவில் அறங்காவலர்கள் நியமனங்களை கண்காணிப்பதாக தெரிவித்தனர்.
கோவில்களின் அன்றாட பணிகளை கவனிக்கவும், நிலம் மற்றும் சொத்துக்களை மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் போதுமான ஊழியர்கள் தேவை என்பதால், அயல் பணியாக கோவில்களுக்கு இந்து சமய அறநிலைய துறை ஊழியர்கள், அதிகாரிகள் நியமிப்பதற்கு தடை விதிக்க முடியாது என மறுத்த நீதிபதிகள், அறங்காவலர்களை விரைந்து நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி விசாரணையை டிசம்பர் 2 வரு வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.
இதற்கிடையில் அறங்காவலர்கள் தேர்வுக்கான மாவட்ட குழுக்கள் அமைக்கப்படும் எனவும் நீதிபதிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.