ஜம்மு காஷ்மீர் சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய கோரிய மனுதள்ளுபடி.. சென்னை ஹைகோர்ட் அதிரடி
சென்னை: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசமாக பிரித்த மத்திய அரசின் சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஜம்மு, காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது பிரிவை ரத்து செய்த மத்திய அரசு, அம்மாநில சட்டமன்றத்தின் அனுமதி பெறாமல் மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்து நாடாளுமன்றத்தில் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தை நிறைவேற்றியது.
இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம் எல் ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், காஷ்மீரைப் போல பிற மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களாக சுருக்கும் அபாயம் இருப்பதாகவும் மனுதாரர் அச்சம் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களை அம்மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல், யூனியன் பிரதேசமாக மாற்றுவதற்கு மத்திய அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என கூறியுள்ள மனுதாரர், மத்திய அரசின் நடவடிக்கை கூட்டாச்சி கொள்கைக்கு விரோதமாக இயற்றப்பட்ட இந்த சட்டத்திற்கு தடை விதித்து செல்லாது என அறிவிக்க கோரியிருந்தார்.
இந்த மனு விசாரணைக்கு உகந்தது தானா? இல்லையா? என்பது குறித்து, நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வில் ஏற்கனவே விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஜம்மு காஷ்மீரைப் பிரித்தது போல தமிழகத்தையும் பிரிக்க வாய்ப்புள்ளதாகவும், அதனால் இந்த வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
காஷ்மீரைப் போல தமிழகத்தை பிரித்துவிடுவார்கள் என்ற சந்தேகங்களுக்கும், யூகங்களுக்கும் பதிலளிக்க முடியாது எனவும், யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வாய்ப்புள்ளதாக எந்த மாநிலமும் அச்சம் தெரிவிக்கவில்லை எனவும், யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதால் கூட்டாட்சி கொள்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
மேலும், ஏற்கனவே இது சம்பந்தமான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா? இல்லையா என்பது குறித்த தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்த நிலையில் இந்த மனுவை இன்று தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நீதிபதிகள் தங்கள் உத்தரவில் மனுதாரர் ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர் அல்ல என்பதாலும், இதே போன்ற வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என தெரிவித்துள்ளனர்.