அதிமுக பொதுக் குழுவுக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்
சென்னை: வரும் 24ம் தேதி அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு திரும்பப் பெறப்பட்டதையடுத்து தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தில் நிவாரணம் பெற்றுக் கொள்ள மனுதாரருக்கு அனுமதி அளித்தும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி சேலத்தைச் சேர்ந்த கட்சி உறுப்பினர் சுந்தரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு, பிளவுபட்ட கட்சி, மீண்டும் இணைந்து... அதன் பிறகு பொதுச்செயலாளர் பதவியை ரத்து செய்து விட்டு, பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர். உறுப்பினர்களின் பரிந்துரை இல்லாமல் விதிகளுக்கு மாறாக இவர்கள் இருவரும் நியமிக்கப்பட்டுள்ளதாக மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் ஆணையத்தில் 2019ம் ஆண்டு இறுதிக்குள் உட்கட்சி தேர்தலை நடத்தி முடிப்பதாக கட்சி சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை தேர்தல் நடத்த எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை எனவும், மாறாக உள்ளாட்சித் தேர்தல் குறித்து விவாதிக்க வரும் 24ம் தேதி கட்சியின் பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறியுள்ளார்.
உட்கட்சி தேர்தலை நடத்த கட்சியின் அவைத் தலைவருக்கு உத்தரவிட வேண்டும் எனவும், பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனு நீதிபதி ஆதிகேசவலு முன் விசாரணைக்கு வந்தது அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உள்கட்சி விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிடுவதில்லை எனவும் சின்னங்கள் தொடர்பான பிரச்சினை எழும்போது மட்டுமே தேர்தல் ஆணையம் தலையிடும் என்றும் விளக்கமளித்தார்.
தொடர்ந்து நீதிபதி, அரசியல் கட்சிக்கு உத்தரவிடக்கோரி ரிட் மனு தாக்கல் செய்ய முடியாது என்றும், இது தொடர்பாக சிவில் நீதிமன்றத்தில் நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் மனுதாரருக்கு அறிவுறுத்தினார்.
இதையடுத்து, மனுவை திரும்ப பெற மனுதாரர் தரப்பில் அனுமதி கோரப்பட்டது. திரும்பப் பெறப்பட்டதை அடுத்து, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஆதிகேசவலு உத்தரவிட்டார்.