"இவர்களின்" குறி ஜெயலலிதாவின் சொத்துகளை அபகரிப்பதிலேயே இருக்கு - ஹைகோர்ட் நீதிபதி விளாசல்
சென்னை: ஜெயலலிதாவின் சொத்துகளை அபகரிப்பதிலேயே தீபக்கும் தீபாவும் குறியாக உள்ளனர் என்று நீதிபதி வைத்தியநாதன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
அம்ருதாதான் ஜெயலலிதாவின் வாரிசு என்று அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி வைத்தியநாதன் விசாரித்தார்.
அப்போது அவர் கூறுகையில் ஜெயலலிதாதான் தனது தாய் என்பதற்கான வலுவான ஆதாரங்கள் ஏதும் அம்ருதாவிடம் இல்லை. மேலும் ஜெயலலிதாவின் தாய் சந்தியா கடந்த 1971-ஆம் ஆண்டு எழுதிய உயிலில் ஜெயக்குமார், ஜெயலலிதா ஆகியோர்தான் வாரிசு என்று குறிப்பிட்டுள்ளார்.
நேரடி வாரிசு இல்லை
அதில் அம்ருதாவின் வளர்ப்பு தாய் சைலஜா குறித்து எந்த தகவலும் இல்லை. சைலஜா தன்னை ஜெயலலிதாவின் தங்கை என்று ஒரு முறை பேட்டி கொடுத்த போதும் அவர் மீது ஜெ. அவதூறு வழக்கு தொடர்ந்தார். எனவே ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசு இல்லை.
வலியுறுத்தவில்லை
இரண்டாம் நிலை வாரிசுகள் தீபா, தீபக் மட்டுமே உள்ளனர். இவர்கள் இருவரும் ஜெயலலிதாவின் உடலை வைஷ்ணவ முறைப்படி அடக்கம் செய்ய அதிக ஆர்வம் காட்டவில்லை. இறுதிச் சடங்கு செய்த தீபக்கும் அதை வலியுறுத்தவில்லை.
நம்பிக்கை
ஜெயலலிதாவின் நற்பெயருக்கு அம்ருதா களங்கம் ஏற்படுத்துவதாக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. புராணங்களின்படி இறந்தவர்களுக்கும் அந்தரங்க உரிமை உள்ளது. அவர்களது ஆத்மாவை தொந்தரவு செய்யக் கூடாது. மரணத்துக்கு பின்னரும் அவர்கள் வாழ்கின்றனர் என்ற நம்பிக்கை இருக்கிறது.
அபகரிக்கவே போராட்டம்
இறுதிச் சடங்கு குறித்து அம்ருதாதான் கோரிக்கை விடுக்கிறாரே தவிர தீபாவும் தீபக்கும் இதுகுறித்து வாய் திறக்கவில்லை. அவர்களுக்குள்ளும் ஒற்றுமை இல்லை. அதே நேரம் அவர்கள் இருவரும் ஜெயலலிதாவின் சொத்துகளை அபகரிக்கத்தான் முயற்சிக்கின்றனர். அதுவும் ஜெயலலிதா வகித்து வந்த அரசியல் பதவியை அபகரிக்கவே தீபா போராடுகிறார் என்றார் வைத்தியநாதன்.