சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெ. தண்டிக்கப்பட்ட குற்றவாளி அல்ல- உயர்நீதிமன்றம்
சென்னை: ஜெயலலிதா தண்டிக்கப்பட்ட குற்றவாளி அல்ல என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளியாக ஜெயலலிதாவின் பெயர் சேர்க்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்றும் அவர்களுக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையையும் நீதிபதி குன்ஹா விதித்து தீர்ப்பளித்தார்.
மேல்முறையீடு
இதையடுத்து சிறையில் சில நாட்கள் அடைக்கப்பட்டிருந்த நிலையில் குன்ஹாவின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்டோர் மேல்முறையீடு செய்தனர்.
சிறை தண்டனை
இந்த நிலையில் குன்ஹாவின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் கடந்த 2017-ஆம் ஆண்டு உறுதி செய்தது. இந்நிலையில் ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டே காலமாகிவிட்டதால் மற்ற மூவரும் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
தடை விதிக்க
இதனிடையே ஜெயலலிதாவுக்கு ரூ. 50 கோடி செலவில் மெரினாவில் மணி மண்டபம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. இதை எதிர்த்து எம்எல் ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவருக்கு அரசு செலவில் மணி மண்டபம் கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரினார்.
மனுதாரர்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு ஜெயலலிதா தண்டிக்கப்பட்ட குற்றவாளி அல்ல. எனவே அவருக்கு மணி மண்டபம் கட்ட தடை விதிக்க முடியாது என்று கூறி மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்தனர்.