மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ கட்டணமில்லா தொலைபேசி எண் செயல்படாதது குறித்து அறிக்கை கேட்ட ஹைகோர்ட்
சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவதற்காக அமைக்கப்பட்ட கட்டணமில்லா தொலைபேசி எண் செயல்படாதது குறித்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ஐந்தாயிரம் ரூபாய் வழங்கவும், மாற்றுத்திறனாளிகள் தங்கள் குறைகளை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிக்க அரசுக்கு உத்தரவு கோரியும் திருப்பூரைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஆஷா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் குறைகளை தெரிவிக்க 24 மணி நேரமும் இயங்கும் கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு, நீதிபதிகள், தங்கள் மொபைல் மூலம் தொடர்புகொண்டபோது, இரண்டு முறை இணைப்பு கிடைக்கவில்லை.
மிரட்டும் வெட்டுக் கிளிகள்.. வளைத்துப் பிடித்து கோழிக்கு தீவனமாக்கும் விவசாயிகள்.. பலே பாகிஸ்தான்!
இதையடுத்து, மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டணமில்லா தொலைபேசி செயல்படாமல் இருந்தால் அவர்களின் குறைகளை எப்படி கேட்க முடியும் எனவும் இதை உடனடியாக சரி செய்ய வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்திய நீதிபதிகள், இதுகுறித்து இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டனர்.