புதிய மாவட்டமாக செய்யாறை உருவாக்கக் கோரும் மனு.. தமிழக அரசு பதிலளிக்க சென்னை ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறை தலைமையாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க கோரிய மனு குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செய்யாறை தலைமையிடமாக கொண்டு வெம்பாக்கம், வந்தவாசி, சேத்பட்டு, ஆரணி உள்பட 5 தாலுக்காக்களை உள்ளடக்கிய புதிய மாவட்டத்தை உருவாக்க கோரி, பையூர் தாலுகாவை சேர்ந்த விஜய்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், கடந்த 1989-ம் ஆண்டு வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரித்து திருவண்ணாமலை மாவட்டம் உருவாக்கப்பட்டது. பையூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து மக்கள் பிரச்சனைக்காக அதிகாரிகளிடம் புகார் அளிக்க 100 கிமீ வரை பயணிக்க வேண்டி இருப்பதாகவும், இதுகுறித்து இரண்டு முதல்வர்களிடம் மனு அளித்தாகவும், செய்யாறை மாவட்டமாக அறிவிக்க உள்கட்டமைப்பு பணிகள் முடிவடைந்துவிட்ட நிலையிலும், அறிவிப்பு வெளியாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வு, மனு குறித்து ஜனவரி 23ம் தேதிக்குள் விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தது.