கட்டாய கல்வி உரிமை சட்டம்.. 25 சதவீத இட ஒதுக்கீடு குறித்து அட்டவணை வெளியிடக் கோரி ஹைகோர்ட்டில் மனு
சென்னை: 2020-21ஆம் கல்வி ஆண்டில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள 25 சதவிகித இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கான நடைமுறைகள் மற்றும் கால அட்டவணையை வெளியிடக்கோரி பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
6 முதல் 14 வரையிலான வயதுடையவர்களுக்கு கட்டாய இலசவச கல்வி கிடைப்பதற்காக கொண்டு வரப்பட்ட கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படையில், சிறுபான்மை அல்லாத பள்ளிகளில் உள்ள மாணவர் சேர்க்கைக்கான இடங்களில் ஒவ்வொரு ஆண்டும் 25 சதவிகிதம் ஒதுக்கப்படுகிறது. அதற்கான மாணவர் சேர்க்கை ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்கி மே 29ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா தாக்கத்தால் அந்த நடைமுறை கேள்விக்குறியாகி உள்ள நிலையில், இதுதொடர்பாக பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பில் அதன் மாநில செயலாளர் ஜெ. முகம்மது ரசின் பொது நல மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், கொரோனா தாக்கத்தால் கடந்த மார்ச் மாதம் இறுதியிலிருந்தே பள்ளிகள் மூடப்பட்டு, எப்போது திறக்கப்படும் என முடிவெடுக்கப்படாத நிலை உருவாகி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டு கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் உள்ள இடங்கள் எவ்வாறு நிரப்பப்படும் என தமிழக அரசு இதுவரை எந்த அறிவிப்போ அல்லது தெளிவுபடுத்துதலையோ வழங்கவில்லை என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை தொடங்கி உள்ளதும், கல்வி கட்டணத்தில் 40 சதவிகிதத்தை வசூலிக்கலாம் என ஜூலை 17ஆம் தேதி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் இடம் கிடைக்கும் என நம்பியுள்ள பெற்றோரை சிரமத்தில் ஆழ்த்தி உள்ளதாகவும் முகம்மது ரசின் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள 25 சதவிகித இலவச மாணவர் சேர்க்கை இடங்கள் நிரப்புவதற்கான நடைமுறைகளையும், கால அட்டவணையையும் தமிழக அரசு வெளியிட உத்தரவிட வேண்டுமெனவும், அவற்றை பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் விளம்பரபடுத்த வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
அடுத்த 24 மணி நேரத்தில்.. கோவை உட்பட 7 மாவட்டங்களில் கன மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
Recommended Video
நுழைவு நிலை வகுப்புகளான எல்.கே.ஜி. மற்றும் ஒன்றாம் வகுப்பு இடங்களில் 25 சதவிகித இடங்களை ஒதுக்கிவைக்கும்படி உத்தரவிட வேண்டுமென இடைக்கால கோரிக்கையும் வைத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.