அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. பிப்.1 இல் தீர்ப்பு வழங்குகிறது நீதிமன்றம்
சென்னை: அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பை பிப்ரவரி 1-ம் தேதி வழங்குவதாக சென்னை மாவட்ட சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கும் நீதின்றம் அறிவித்துள்ளது.
சென்னை அயனாவரத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த குடியிருப்பில் பணிபுரிந்த 17 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் கைது செய்தனர்.
இந்நிலையில் இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். 17 பேர் மீதான குண்டர் சட்டத்தை 2019-ம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதி உயர்நீதிமன்றம் ரத்து செய்த பின்னரும், 17 பேருக்கும் ஜாமீன் கிடைக்கவில்லை.
இந்நிலையில் 17 பேருக்கு எதிரான வழக்கின் விசாரணையை 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் மகிளா நீதிமன்றம் தொடங்கியது.. இந்த வழக்கில் அரசு தரப்பு சிறப்பு வழக்குரைஞராக என்.ரமேஷ் நியமிக்கப்பட்டார். அதேபோல, குற்றம்சாட்டபட்ட 17 பேருக்கும் தனி தனியாக வழக்குரைஞர்களாக ஆஜராகினர்.
அது புலிகள் நிரம்பிய காடு.. ரஜினியின் மேன் vs வைல்ட் நிகழ்ச்சிக்கு இயற்கை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு
இந்த வழக்கு விசாரணையின் போது, 7 குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு சாட்சிகளும், 36 அரசு தரப்பு சாட்சிகளும் விசாரிக்கப்பட்டு, 120 ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
கடந்த 11 மாதங்களாக நடைபெற்று வந்த வழக்கு விசாரணை கடந்த டிசம்பர் மாதம் முடிவடைந்ததையடுத்து சென்னை மாவட்ட சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்பு நீதின்ற நீதிபதி மஞ்சுளா வழக்கின் தீர்ப்பை பிப்ரவரி 1-ம் தேதி வழங்கவுள்ளார்..
குற்றம்சாட்டபட்ட 17 பேரில் பாபு என்பவர் சிறையில் உயிரிழந்தார். இதனையடுத்து 16 பேருக்கு எதிரான வழக்கில் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது.