கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கு.. வேறு நீதிமன்றம் மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை
சென்னை: வருமானத்தை மறைத்ததாக கார்த்திக் சிதம்பரம் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க தடை விதிக்க கோரி தொடர்ந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றம் செய்து தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்து சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி அனிதா சுமந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்
கடந்த 2015-16-ம் ஆண்டு வருமான வரிக்கணக்கில், முட்டுக்காடு கிராமத்தில் உள்ள 1.18 ஏக்கர் நிலத்தை விற்றதன் மூலம் கிடைத்த வருமானத்தில் 6.38 கோடி ரூபாயை கணக்கில் காட்டவில்லை எனக் கூறி, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக வருமான வரித்துறை 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை கடந்த ஆண்டு ஜூலை மாதம், எம்.பி.- எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றபட்டது.
குமரியில் சுட்டுக் கொல்லப்பட்ட வில்சனின் குடும்பத்திற்கு ரூ 1 கோடி நிதி வழங்கினார் முதல்வர் எடப்பாடி
சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியதை எதிர்த்து, ஸ்ரீநிதி மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில் வருமான வரிதுறை வழக்கு பதிவு செய்த போது எம்.பியாக கார்த்திக் சிதம்பரம் இல்லை எனவே இந்த வழக்கை மாற்றியதை ரத்து செய்ய வேண்டும் அதுவரை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தனர்.
இந்த வழக்கு இன்று நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தது. வருமான வரிதுறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கார்த்திக் சிதம்பரம் இயக்குநராக இருந்த அட்வான்டேஜ் ஸ்ட்ரடஜி நிறுவனத்தில் இருந்து கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில் தான் இந்த வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது. அந்த நிறுவனத்திற்கு வழக்கறிஞராக நீங்கள் ( நீதிபதி அனிதா சுமந்த்) ஆஜராகி உள்ளதால் வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என தெரிவித்தார்.
இதனையடுத்து வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்து உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கில் வரும் 21 ஆம் தேதி கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர்க்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யபடவுள்ளது குறிப்பிடத்தக்கது.