தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்.. இன்று அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் இதுவரை நடத்திய விசாரணை தொடர்பான விவரங்களை இன்று தாக்கல் செய்ய ஆணைய செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மூடியதை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வில் விசாரணையில் உள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் நடத்திவரும் விசாரணை நிலை என்ன என்பது குறித்து தெரிவிக்க சிபிஐ மற்றும் தமிழக அரசுக்கு நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாகவும், வரும் செப்டம்பர் 16ம் தேதி மதுரைக் கிளையில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் இதுவரை 365 சாட்சிகளை விசாரித்துள்ளதாகவும், 550 ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் 300 சாட்சிகளுக்கு மேல் விசாரிக்க வேண்டி இருப்பதாகவும் தெரிவித்தார்.
அதை பதிவு செய்த நீதிபதிகள், விசாரணை ஆணையம் இதுவரை மேற்கொண்ட விசாரணை தொடர்பான விவரங்களை ஆணைய செயலாளர் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை இன்றைக்கு தள்ளிவைத்தனர்.