மெரினாவில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க தடை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி!
சென்னை மெரினாவில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க சென்னை ஹைகோர்ட் தடை விதித்துள்ளது.
சென்னை: சென்னை மெரினாவில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க சென்னை ஹைகோர்ட் தடை விதித்துள்ளது.
அதிமுகவின் முதுபெரும் தலைவரும் முன்னாள் முதல்வருமான மறைந்த எம்ஜிஆருக்கு, கடந்த வருடம் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் எம்ஜிஆர் நினைவு வளைவு மெரினாவில் அமைக்கப்படும் என்று கூறப்பட்டது. கடைசியாக சென்னையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் செப்டம்பர் 30-ஆம் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
சென்னை மெரினா கடற்கரையை ஒட்டிய காமராஜர் சாலையில் இந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவு வளைவு கட்ட திட்டமிடப்பட்டது. இதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கிய வேலை தொடர்ந்து நடந்து வந்தது.
இதை கட்ட 2 கோடியே 52 லட்சம் ரூபாய் செலவு ஆகும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில்தான் இந்த வளைவிற்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் தினேஷ் குமார் சென்னை ஹைகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடுத்தார். அந்த வழக்கை விசாரித்த சென்னை ஹைகோர்ட் நீதிபதிகள் இன்று முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
அதன்படி சென்னை மெரினாவில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க தடை விதிப்பதாக கூறியுள்ளனர். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சாலை என்பதால் தடை விதிப்பதாகவும், ஆக்கிரமிப்பாக கருதி வளைவை திறக்க தடை விதிப்பதாகவும் சென்னை ஹைகோர்ட் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
கட்டுமான பணிகளை முடிக்கலாம்: ஆனால் திறக்க கூடாது. வழக்கு முடியும் வரை வளைவை திறக்க கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இந்த வழக்கில் பொதுப்பணித்துறை பதில் அளிக்க வேண்டும். காமராஜர் சாலையில் வைக்கப்பட்ட நடிகர் சிவாஜி கணேசன் சிலை எப்படி விதிகளின்படி அகற்றப்பட்டதோ அதே விதிகள் இதற்கும் பொருந்தும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
அதேபோல் மக்களின் வரிப்பணத்தை அரசு தேவையில்லாமல் செலவு செய்கிறது . ஆட்சியாளர்களால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.