கார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கு.. குற்றப்பதிவு செய்ய தடை நீடிப்பு.. ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: வருமானத்தை மறைத்தாக வருமான வரித் துறை பதிவு செய்த வழக்கில் கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்ய விதிக்கப்பட்ட இடைக்கால தடையை பிப்ரவரி 12 வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகிய இருவரும், பழைய மாமல்லபுரம் சாலையில் முட்டுக்காட்டில் உள்ள தங்களுக்கு சொந்தமான சொத்துகளை கடந்த 2015 ஆம் ஆண்டு அக்னி எஸ்டேட்ஸ் பவுன்டேசன் என்ற நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளனர்.
இந்த விற்பனை மூலம் பெற்ற 7 கோடியே 73 லட்சம் ரூபாயை வருமான வரி கணக்கில் காட்டாமல் மறைத்ததாக, கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் மீது வருமான வரித்துறை 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு முதலில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பின்னர் எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க கோரி கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்த சிறப்பு நீதிமன்றம், குற்றச்சாட்டுக்கள் பதிவுக்காக கடந்த 21 ஆம் தேதி (ஜனவரி 21) நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், தங்களுக்கு எதிரான இந்த வழக்கை, சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியதை எதிர்த்து, கார்த்தி சிதம்பரமும், ஸ்ரீநிதியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்கவும் கோரியிருந்தனர்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தர் முன் கடந்த 21 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. குற்றச்சாட்டு பதிவுக்கு 27 ஆம் தேதி வரை இடைக் கால தடை விதித்து உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி கார்த்திக் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.டி. துள்சி, வழக்கை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெறும் ஒரு வழக்கை மாற்றும்போது வேறு ஒரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு மட்டுமே மாற்ற வேண்டும். ஆனால் செசன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்ற கூடாது. அவ்வாறு மாற்றியது சட்ட விதிகளுக்கு எதிரானது என வாதிட்டார்.
இதே போல் மற்றொரு மூத்த வழக்கறிஞர் அமீத் தேசாய், குற்றச்சாட்டு கூறப்படும் 2015- 2016 ஆம் ஆண்டிற்கான வருமான வரி தொடர்பான மதிப்பீடு மற்றும் மறு மதிப்பீடு பணிகள் அனைத்தையும் முடித்த பிறகு வருமானவரித்துறை இந்த வழக்கை பதிவு செய்தது தவறு எனவும் மறு மதிப்பீடு பணிகளை முடித்த பிறகு மீண்டும் வரி செலுத்தியதை மறு ஆய்வு (reopen) செய்வது தவறு எனவே வருமான வரித்துறை உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.
இதனையடுத்து வாதங்கள் நிறைவடைந்ததால் வழக்கின் விசாரணை பிப்ரவரி 12 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். அதுவரை குற்றச்சாட்டு பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடையை நீட்டிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.