அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் 7.5% கோட்டா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் சூப்பர் பாராட்டு
சென்னை: அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியது, "தமிழகத்தில் நீண்ட காலத்தில் நடைபெற்ற மிகச் சிறந்த விஷயம்" என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பாராட்டு தெரிவித்து உள்ளார்.
கடலூரைச் சேர்ந்த மாணவிகள் தர்ஷினி மற்றும் இலக்கியா ஆகியோரின் பெற்றோர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கு விசாரணையின்போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த கருத்தை பதிவு செய்துள்ளார்.
மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதிடுகையில், இந்த மாணவிகள் 7.5% கோட்டா மூலமாக தனியார் கல்லூரிகளில் சேருவதற்கு இடம் கிடைக்க பெற்றவர்கள். ஆனால் அவர்கள் கல்வி கட்டணத்தை செலுத்த முடியவில்லை என்பதற்காக காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார். ஆனால் அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன் வாதிடுகையில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு மூலமாக, மருத்துவ கல்லூரிகளில் சீட் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் அரசு கல்வி தொகையை செலுத்த முடிவு செய்துள்ளது.
தனியார் கல்லூரிகளில் அவர்களுக்கு இடம் கிடைத்து இருந்தால் கூட, அரசு இந்த உதவியைச் செய்யும். ஒரு பைசா கூட மாணவர்கள் கட்டணமாக செலுத்த வேண்டியதில்லை. இது மட்டும் கிடையாது, அந்த மாணவர்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகளையும் மாநில அரசே செய்து கொடுக்கும்.
95 சதவீதம் பேர் ஏற்பு
கவுன்சிலிங் நடைபெற்றபோது, இது தொடர்பான உத்தரவு அரசாணையாக வெளியாகவில்லை. ஆனால் மாணவர்களுக்கு வாய்மொழியாக இந்த தகவலை அதிகாரிகள் தெரிவித்தனர். சுமார் 95 சதவீத மாணவர்கள் இந்த வாய்மொழி உத்தரவாதத்தை ஏற்றுக் கொண்டனர். சீட் ஒதுக்கீடு கடிதத்தை பெற்றுக்கொண்டனர். கல்லூரிகளில் சேர்ந்து விட்டனர்.
கல்வி கட்டணம் அச்சம்
ஆனால் சில மாணவர்கள் தனியார் கல்லூரிகளில் சேரவில்லை. இட ஒதுக்கீட்டுக்கான கடிதத்தை பெற்றுக்கொண்ட போதிலும் கூட, கல்விக் கட்டணம் தொடர்பான அச்சத்தின் காரணமாக அவர்கள் சேராமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு அரசு சார்பில் மறு உறுதி அளிக்கப்பட்டு ஒதுக்கீடு கடிதங்கள் வழங்கப்படும்.
கடிதத்தை கூட பெறவில்லை
மூன்றாவது பிரிவாக ஒரு சில மாணவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எப்படி என்றால்.. ஒதுக்கீடு கடிதத்தையும் பெறவில்லை, கல்லூரிகளிலும் சேர முடியவில்லை. இந்த மனுதாரர் தரப்பு அதேபோன்ற மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள்தான். இதுபோன்ற பிரிவில் உள்ள மாணவர்களையும், கல்வி பயில வைப்பதற்கு அரசு முழு முயற்சிகளை எடுக்கும்.
அகில இந்தியா கோட்டா இருக்கே
அகில இந்திய கோட்டாவின்கீழ், நிரப்பப்படாத மருத்துவ சீட்டுகள் திருப்பியும் மாநில அரசுக்கு வரும். இவ்வாறு வரக்கூடிய சீட்டுகளை இது போன்ற மாணவர்களுக்கு பகிர்ந்து அளிக்க ஏற்பாடு செய்வோம். ஒவ்வொரு வருடமும் மத்திய அரசு சுமார் 100 முதல் 150 சீட்டுகளை தமிழக அரசுக்கு திருப்பி கொடுத்து வருகிறது. இது தவிர சில தனியார் கல்லூரிகளும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சீட்டுகளை அரசுக்கு திரும்ப தருகின்றன. இதுபோன்ற சீட்டுகள் திரும்ப கிடைத்த பிறகு இந்த மாணவர்களுக்கும் 7.5% கோட்டா பலன் கிடைக்கும். இவ்வாறு அட்வகேட் ஜெனரல் விஜயநாராயணன் வாதிட்டார்.
அருமையான உத்தரவு
அப்போது கருத்து தெரிவித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தமிழகத்தில் நீண்ட காலமாக நடைபெற்ற மிகச்சிறந்த ஒரு விஷயம் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க உத்தரவு ஆணைதான். இது ஒரு முக்கியமான திருப்புமுனை என்று நான் கூறுவேன். அரசு பள்ளி மாணவர்களும், அவர்களது குடும்பமும் அடுத்த அந்தஸ்து நிலைக்கு உயர்வதற்கு இது வழிவகை செய்யும். இவ்வாறு நீதிபதி தெரிவித்தார். இந்த வழக்கு டிசம்பர் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. டிசம்பர் 8-ஆம் தேதி அனைத்திந்திய கோட்டாவில் நிரப்பப்படாத சீட்டுகள் தொடர்பாக விவரம் வெளியாகும் என்பதால் வழக்கு 11 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் உறுதி
நீட் நுழைவுத்தேர்வு காரணமாக அரசு பள்ளி மாணவர்கள், ஏழை எளிய மாணவர்கள் மருத்துவ கல்லூரி சேர முடியாமல் தவித்தனர். மத்திய அரசு நீட் தேர்வை நடத்துவதில் உறுதியாக இருந்தது. ஆனால் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு, மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டது. ஆளுநர் அனுமதி அளிக்க தாமதம் செய்த நிலையில் அரசாணையாக வெளியிட்டு அதிரடி காட்டினார் முதல்வர். இதன்பிறகு ஆளுநரும் அந்த உத்தரவுக்கு ஒப்புதல் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.