செங்கல் சூளையில் 300 கொத்தடிமைகள்.. சென்னை ஹைகோர்ட்டில் அதிரடி வழக்கு.. தமிழக அரசு நோட்டீஸ்
சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள 300 பேரை மீட்கக் கோரிய மனுவுக்கு தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், புதுப்பாக்கத்தில் முனுசாமி என்பவரின் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டுள்ள துமா பார்தியா, சாட்டி பாரியா, கோபால் சாஹு, ஒஷா பந்து சாஹு உள்பட 300 பேரை மீட்க உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் சூரிய பிரகாசம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டுள்ள இவர்கள் தப்பியோட முயற்சித்ததாக கூறி, அடியாட்களை ஏவி விட்டு கடுமையாக தாக்கியுள்ளதாகவும், இதில் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை வழங்கவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், இத்தாக்குதல் சம்பவம் குறித்த வீடியோ காட்சிகளை சமூக வலைதளங்கள் மூலம் தெரிந்து கொண்ட சமூக ஆர்வலர்கள் மூலம் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
50 குழந்தைகளும் சட்டவிரோதமாக காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களை மீட்க நடவடிக்கைகள் எடுக்காமல், அரசு அதிகாரிகள் கண்மூடி வேடிக்கை பார்ப்பதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.
வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கு.. ஆர்.எஸ்.பாரதிக்கு ஜாமீன்.. சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவு
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, மனுவுக்கு நாளை மறுதினம் பதிலளிக்க தமிழக உள்துறை செயலாளர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டது.