கையை வச்சுட்டு சும்மா இருக்கணும்.. ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.. ஹைகோர்ட்டின் அதிரடி உத்தரவு
உயரதிகாரிகளின் அலுவலக அறைகளில் காமிரா பொருத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை: அனைத்து உயர் அதிகாரிகளின் அறைகளிலும், முக்கியமாக பெண் ஊழியர்கள் பணியாற்றும் அலுவலகங்களில் சிசிடிவி காமரா பொருத்த வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஐ.ஜி முருகனுக்கு எதிரான பெண் எஸ்பியின் பாலியல் புகார் குறித்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஐஜி முருகனுக்கு எதிராக அவரது துறையிலேயே பணியாற்றும் பெண் எஸ்பி ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு பாலியல் புகார் தந்தார். இது தொடர்பாக விசாகா கமிட்டி அமைக்கப்பட்டு விசாரணையும் நடைபெற்றது.
அப்போது, முருகன் மீதான புகாரை சிபிசிஐடி போலீசார் விசாரிக்கலாம் என விசாகா கமிட்டி பரிந்துரை செய்தது. ஆனால் இதனை எதிர்த்து ஐஜி முருகன் ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றினை தொடர்ந்தார்.
நடவடிக்கை
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் , "ஐஜி முருகன் மீது புகார் வந்து 6 மாதமாகியும் ஏன் நடவடிக்கை இல்லை? என கேள்வி எழுப்பினார்.
புகார்கள்
பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் சம்பந்தமான புகார்களை பெறும்போது, துரிதமாக செயல்பட வேண்டும் என்றும் நடைமுறை குறைகளை கருத்தில் கொள்ளக்கூடாது என்றும் கூறி வழக்கின் தீர்ப்பை இன்றைய தினத்துக்கும் ஒத்தி வைத்தார்.
எஸ்.எம்.சுப்பிரமணியம்
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஐஜி முருகன் மீது பெண் எஸ்பி கூறிய பாலியல் புகார் குறித்து சிபிசிஐடி தொடர்ந்து விசாரிக்கலாம் என்று நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டதுடன், முருகன் தொடுத்த வழக்கையும் தள்ளுபடி செய்துவிட்டார்.
காமிராக்கள்
பின்னர், பணி செய்யும் இடங்களில் பெண்களுக்கு நிகழும் பாலியல் தொல்லையை தடுக்கும் வகையில் தமிழக காவல்துறை உட்பட அனைத்துத்துறை உயர் அதிகாரிகளின் அறைகளிலும் இன்னும் 2 வாரத்திற்குள் கட்டாயம் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். முதலில் தனது அறையிலும் சிசிடிவி கேமரா பொருத்துமாறு பதிவாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.