புதுச்சேரி அரசின் செயல்பாட்டில் தலையிட துணை நிலை ஆளுநருக்கு உரிமை இல்லை.. ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு
சென்னை: புதுச்சேரி துணை நிலை ஆளுநருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரங்களை உயர் நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது.
"புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் நடவடிக்கைகளில் தலையிடும் வகையிலும், அவற்றில் அதிகாரிகளிடம் உள்ள ஆவணங்களை கேட்க அதிகாரம் உள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேச நிர்வாகி துணை நிலை ஆளுநர் என்பதால் அவருக்கு அதிகாரம் உள்ளது" எனக்கூறி, 2017 ஜனவரி 27ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது.
உள்துறை அமைச்சகத்தின் இந்த உத்தரவு செல்லாது என்று அறிவிக்க வலியுறுத்தி, காங்கிரஸ் எம்.எல்.ஏ லட்சுமி நாராயணன் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணை, நீதிபதி மகாதேவன் முன்னிலையில் நடைபெற்றது. இந்த வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரான ப.சிதம்பரம், ஆஜராகி காங்கிரஸ் எம்எல்ஏ தரப்புக்காக வாதிட்டார்.
தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், மத்திய உள்துறை அமைச்சகம் புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கு அதிகாரம் வழங்கி பிறப்பித்த ஆணை ரத்து செய்யப்படுகிறது. புதுவை அரசின் செயல்பாடுகள் தொடர்பாக அன்றாடம் துணை நிலை ஆளுநர் அறிக்கை பெற முடியாது. இவ்வாறு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்புக்கு, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வரவேற்பு தெரிவித்தார். தாங்கள் நடத்திய போராட்டம் வீண் போகவில்லை, புதுச்சேரி மக்களுக்கு கிடைத்த வெற்றி இதுவாகும் என்றும், வழக்கில் ஆஜரான ப.சிதம்பரத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும், நாராயணசாமி கூறினார்.