சர்கார் விவகாரத்தில் அரசுக்கு, உயர் நீதிமன்றம் குட்டு.. நீதிபதி கருத்தால் கோர்ட்டில் சிரிப்பலை!
Recommended Video
சென்னை: சர்கார் பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது, ஹைகோர்ட் தமிழக அரசுக்கு குட்டு வைத்தது. மேலும் கோர்ட்டில் சிரிப்பலை எழுந்தது.
சர்கார் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள சில காட்சிகள் ஜெயலலிதா மற்றும் அதிமுக அரசுக்கு எதிராக இருப்பதாக கூறி அக்கட்சியினர் மாநிலம் முழுக்க போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
படத்தின் இயக்குநர் முருகதாசுக்கு எதிராக சென்னை காவல் ஆணையரிடம், தேவராஜன் என்பவர் நேற்று புகார் அளித்திருந்தார்.
[மறு தணிக்கை செய்யப்பட்டது சர்கார் திரைப்படம்.. எந்தெந்த காட்சி நீக்கம்? இதோ லிஸ்ட்]
போலீஸ் தீவிரம்
தேவராஜன் அளித்த புகாரில், அரசின் விலையில்லா திட்டத்தில் வழங்கப்பட்ட பொருட்களை தீயில் போடுவதை போல படத்தில் காட்சிகளை வைத்துள்ள முருகதாஸ் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்து கைது செய்ய கோரிக்கைவிடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நேற்று நள்ளிரவில், முருகதாஸ் இல்லத்திற்கு போலீசார் சென்று அவரை தேடியுள்ளனர்.
காரசார விவாதம்
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் முருகதாஸ் தரப்பில் இன்று முன்ஜாமீன் கேட்டு விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டது. இன்று மதியம் 2.45 மணியளவில், மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிபதி இளந்திரயன் முன்னிலையில், அரசு தரப்பு வழக்கறிஞர் பிரபாவதியும், முருகதாஸ் தரப்பு வழக்கறிஞர் விவேகானந்தனும் காரசார விவாதம் முன் வைத்தனர்.
சினிமாவாக பாருங்கள்
ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமளவள்ளி என்பதை, சர்கார் படத்தில் பயன்படுத்தியுள்ளனர், அரசு வழங்கிய இலவச பொருட்களை தீயிட்டுள்ளனர் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் குற்றம்சாட்டினார். ஆனால் ஆட்சேபனைக்குரிய காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டது என்று, விவேகானந்தன் வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இளந்திரயன், சினிமாவை, சினிமாவாகத்தான் பார்க்க வேண்டும். தணிக்கை சான்றிதழ் கொடுத்த பிறகும் ஏன் எதிர்க்கிறீர்கள் என்று குட்டு வைத்தார்.
சிரிப்பலை
மேலும், இலவச கலர் டிவியை எரித்திருந்தால் திருப்தியடைந்திருப்பீர்களா? என்று நீதிபதி நகைச்சுவையாக கேட்டார். இதை கேட்டதும், வழக்கறிஞர்கள் சிரித்துவிட்டனர். ஆனால் நீதிபதியின் இந்த கேள்விக்கு அரசு தரப்பு பதில் சொல்லவில்லை. இதையடுத்து, வரும் 27ம் தேதிவரை, முருகதாசை கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டார் நீதிபதி.
கோமளவள்ளிதான் என்கிறது அரசு
ஜெயலலிதாவின் இயற்பெயர் கோமளவள்ளி இல்லை என்று, டிடிவி தினகரன் கூறிய நிலையில், அவரது இயற்பெயர் கோமளவள்ளிதான் என்று, அரசு தரப்பு இன்று ஹைகோர்ட்டில் வாதம் முன் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.